"காதலைப் பத்தி என்னடா தெரியும் உனக்கு?”
பெத்த அப்பா அம்மா செத்தாக்கூட கண்ணீர்தான் விடுறான். ஆனா காதலோ காதலியோ செத்தாத்தான் உயிரவிடுறான்!
எவனாவது அப்பா செத்துட்டாருன்னு உயிரவிட்டானா? அம்மா செத்துட்டாங்கன்னு உயிரவிட்டானா? தம்பி செத்துட்ட்டானேன்னு ‘தம்பீஈஈன்னு’ போய் உயிரவிட்டானா? கெடையாது! காதல் டா காதல்!”
என்று "மன்மதன்" திரைப்படத்தில் வரும் காதலைப் பற்றிய வசனம் கொண்டு துவங்குகிறது இந்த பதிவு!
(குறிப்பு: தூக்குத்தண்டனை பற்றி பேசவேண்டுமானால் தூக்கில் தொங்கியிருக்கத்
தேவையில்லை என்பது போலத்தான் காதலைப் பற்றி பேச, காதலித்திருக்க வேண்டிய அவசியமில்லை)
Infactuation எனத் தொடங்கி எதிர்பாலின ஈர்ப்பில் ஒருவித மகிழ்ச்சியை உணர்ந்து, அந்த உணர்வை மீண்டும் மீண்டும் பெற ஆர்வம் கொண்டு அலைவதுதான் இன்றைய பல காதலின் நிலை!
இன்றைய காதலில் முக்கியமான ஒன்று, செல்ஃபோனில் பேசுவது – அதுவும் விடிய விடிய பேசி விடிந்தும் பேசி மறுபடியும் இருட்டும் வரைகூட பேசி, நண்பர்களுடன் வெளியே சென்றாலும் அங்கு தனியாகப்போய் பேசி, கல்யாண மண்டபக்களில் பேசி, கல்லூரிச் சுற்றுலா போனாலும் பேசி என எங்கு போனாலும் பேசித்த்த்த்த்த்த்த்தள்ளுவது என நீள்கிறது பட்டியல்!
இதில் கணவன் –மனைவியாக எண்ணிக்கொள்வது, குழந்தைக்கு பெயர் வைப்பது முதற்கொண்டு சகலத்தையும் பேசிப்பார்ப்பது, தத்தம் பிரச்சனைகள் குறித்து பேசுவது என்று செல்ஃபோனில் பேசுவதில் மட்டுமே இவ்வளவு இருக்கிறது! இதில் மணிக்கொருமுறை, கிட்டதட்ட ஸ்டேட்டஸ் அப்டேட் போல அடிக்கடி எஸ்.எம்.எஸ் வேறு! மேலும் அங்கங்கு மீட்டிங் போடுவது. ஒரு சினிமா பாடலை தங்களுக்குள் டெடிகேட் செய்துகொள்வது, ஒன்றாக சினிமாவுக்கு போவது – ஊர்சுற்றுவது. இன்னும் பற்பல!
இதுவெல்லாம்தான் காதல் செய்கிறோம் என்ற பெயரில் பெரும்பாலானோர் செய்து கொண்டிருப்பது.
ஆனால், அன்றைய காதலில் இதெல்லாம் இருந்ததாய் தெரியவில்லையே!
ஒரு பெண்ணைப் பார்த்தவுடனே காதல் வருவது – “இவ இல்லைன்னா நான்இல்லடா” என்று அருகில் இருப்பவனை வெறுப்பேற்றுவதெல்லாம் இன்றைய ட்ரெண்டில் மட்டுமே நடக்கிறது! இதில் உச்சகட்ட கடுப்பு என்னவென்றால், "லவ் பண்றியாடா" என்று கேட்டால், "இல்லடா சும்மா ஃப்ரெண்டுதான்" என்பவன் நாலு மாதம் கழித்து., "விட்டுட்டு போயிட்டா மச்சி" என்று அழுதுகொண்டு அஞ்சல பாட்டு போட்டுக்கொண்டு , செத்த எலியை முகர்ந்து பார்த்தவன் போல முஞ்சியை வைத்துக்கொண்டு திரிவார்களே ஷ்ஷ்ஷப்ப்பா! வர்ணிக்க வார்த்தைகள் போதவில்லை!
பின்பு, அதிமுக்கியமான டார்ச்சர்களில் ஒன்று "கவிதை"! ஒரு ஹைக்கூ மேய்ப்பவன் என்பதால், என்னால் ஏற்படும் கடுப்புகள் என்னவென்று எனக்கே தெரியும்!
சர்வசாதாரணமாக முத்தத்தில் தொடங்கி, சில சினிமாக்களின் பாதிப்பால் உந்திவிடப்பட்டு உணர்ச்சிகளை வரைமுறையற்று வெளிக்காட்டி அலப்பறை செய்வதுதான் இன்றைய நிலையில் பலரின் காதல். அதாவது நான் வரையறுத்ததில் So
Called காதல்!
(1) காதலித்து என்ன செய்யப் போகிறோம் – கல்யாணம் தான் – ஆனால் இன்று விவாகரத்து பெறுபவர்களில் பெரும்பாலனோர் காதல் திருமணம் செய்தவர்தானே –ஏன்?
(2) அந்தக்காலத்தில் செல்ஃபோன்கள் இல்லையே – ஃபேஸ்புக் இல்லையே – 24x7 சாட்டிங் இல்லையே! அப்படியானால் அவை காதலே இல்லையா?
லவ் பண்றியாடா என கேட்டதற்கு, சேச்சே சும்மா டைம்பாஸ் மச்சி என்றவனையும் பார்த்திருக்கிறேன்!
என் வீட்டிற்கு முன், தினமும் எட்டு மணிக்கு மீட்டிங் போடும் பள்ளிக்குச்செல்லும் என் ஜூனியர் பெண்ணொருத்தியின் பின்னால் காதல் என்று அலையும் ஒருவன், அவள் பள்ளியிக்கு விஷயம் தெரிந்ததும் அவன் காதலை(! ) மறந்து ஓடிவிட்டதும் நினைவுக்கு வருகிறது.
இவ்வாறாக இன்னும் எத்தனையோ விஷயங்களை சொல்லமுடியும்.
சிலர் காதலிக்கிறார்கள் – சிலர் காதலிப்பதாய் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் –இன்னும் சிலர் காதல் என்பதை கொச்சைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மை!
பள்ளிக் காலத்திலிருந்தே (கிட்டதட்ட 10 ஆண்டுகளுக்கும் மேலாக) காதலித்து, போராடி மணம் முடித்து, இன்று ஒற்றுமையாக ஒன்றாக வாழும் தம்பதியினையும் பார்த்திருக்கிறேன். அவர்களிடம் பேசியதிலிருந்து தெரிந்தது – அவர்கள் ஃபோனில் இவ்வளவாக பேசியதில்லையாம் – வெளியில் அவ்வளவாக சுற்றியதில்லையாம்! இன்னும் எத்தனையோ அழகிய விஷயங்கள் அவர்கள் காதலில் உண்டு!
இது ஒரு காதல் என்றால், இன்னொரு காதலையும் சொல்ல வேண்டியிருக்கிறது –தன் அண்ணன், பெற்றோருக்கும் குடும்பத்திற்கும் எதிராக சென்று காதல் திருமணம் செய்துகொண்டதால், மனமுடைந்த பெற்றோரை மீண்டும் அழவைக்கவேண்டாம் என்று முடிவெடுத்த தம்பியும் (காதலன்) இதேபோல தன் குடும்பத்தின் ஒரு பிரச்சனைக்காக காதலை விட முடிவெடுத்த இன்னொரு அக்காவின் தங்கையான காதலியும் ‘எங்கள் காதலில் எங்களுக்கு நம்பிக்கை உண்டு அது சேர்த்து வைக்கும்’ என்று நம்பி பிரிந்துவிட்டனர்.
இருபத்தி மூன்று வயதான எனக்குத் தெரிந்தவரையிலேயே, காதலில் இவ்வளவு வேறுபாடு உண்டு எனும் போது – இன்னும் எத்தனை கொடுமைகள் அரங்கேறுகின்றனவோ? யாரறிவார்!
ஒரு காதலின் பிரிவையே ஏற்க முடியாமல் உடைந்தவரும் உண்டு – ஒன்னு போனா இன்னொன்னு என்ற வகையும் உண்டு! இவ்வளவு ஏன்? நீதானே என் பொன்வசந்தம் வகை கதைகளைவிட அட்டகத்தி கதைகளுக்குத்தானே இன்று வரவேற்பு அதிகமாய் இருக்கிறது! காதல் என்ற உணர்வுக்கே அர்த்தம் மாறிவிட்டதாய் உணர்கிறேன்!
பெண்களை விளையாட்டுப் பொருளாக பார்க்கும் சிலராலும், ”காதல்” என்பதை எண்டர்டெய்ன்மெண்ட்டாக பாவித்துத் திரிபவர்களாலும், காதலில் வன்மையை ஆயுதமாய் கையிலெடுப்பவர்களாலும், பலரின் வாழ்க்கையே சீர்குலைத்து/சீரழித்துவிடுகிறது. காதலை ஏற்க மறுத்த வினோதினிக்கு நடந்தகொடுமையும் இதற்கு ஒரு உதாரணம்!
இன்றைய சில காதலில், ஒழுக்கச் சீரழிவு நிகழ்திருப்பதே உண்மை!
எது எப்படியோ..
காதலையும் So Called காதலையும் வேறுபடுத்திப்பார்க்கும் பக்குவம் எனக்கு வந்திருப்பதை என்னால் உணர முடிகிறது என்றாலும், என்னால் – காதலுக்கு விளக்கம் கொடுக்க முடியாது – காரணமும் சொல்ல முடியாது. என்னால் மட்டுமல்ல எவனாலும் முடியாது.
நல்லது நடந்தால் சரி என்ற எண்ணத்தில் முடிக்கிறேன்…
பின்குறிப்பு 1: என் ஜூனியரின் பின்னால் காதல் என்று அலைந்தவனை வேறு ஒரு பெண்ணுடன் வேறு ஒரு இடத்தில் அதே எட்டு மணிக்கு பார்த்தேன்
- இது காதலா??
பின்குறிப்பு 2: பெற்றோர் மனதை புண்படுத்த விரும்பாத அந்த காதலர்கள், பற்பல முயற்சியால், இன்று பெற்றோர் சம்மதத்துடன் மனமுடித்து வாழ்ந்து வருகிறார்கள்
– இது தான் காதல்!
-
நஸ்ருதீன் ஷா
மடலிட
NASRUDHEEN@MINNALGAL.IN