என்
குழந்தைகள், இதற்கு முன் குரங்குகளைப் பார்த்ததில்லை போலும்.
"அம்மா
அங்க பாருங்கம்மா. குரங்கு வாழப்பழத்தை நம்மள மாதிரியே சாப்புடுது" என்றான் இளையவன்.
அதை ஆச்சரியமாகப் பார்த்தவள் என் பக்கம் திரும்பி "என்னங்க. அங்க பாருங்களேன்.
குரங்கு வாழப்பழத்தை நம்மள மாதிரியே சாப்புடுது" என்றாள்.
என்
மனைவியும் இதற்கு முன் குரங்கைப் பார்த்ததில்லை போலும்.
சிரித்துவிட்டு,
என் கையைப் பிடித்து நடந்து வந்த மகளிடம் தம்பியுடன் செல்லச் சொல்லிவிட்டு என் மனைவியின்
கையைப் பிடித்துக் கொண்டேன்.
காதல்.
இதற்கு ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு அர்த்தங்கள் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். என்ன
அர்த்தம் தந்தாலும் அவரவருக்கு அவரவர் வரையறை. என்னைப் பொருத்த வரை காதலினால் காயமடைந்தவர்களே
அதிகம் - காதலுடன் கை கோர்த்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி.
காதல்
செத்து நீர்த்த பின்னும் ஏனோ காயம் இன்னும் ஆறவில்லை. அன்றிலிருந்து இன்று வரை காயம்
ஆறாப் பிணமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். கோழையாக இருப்பதிலும் பயனிருக்கத்தான் செய்கின்றது;
இல்லையெனில் இந்நேரம் நான் உயிரோடு இருந்திருக்க மாட்டேன்.
என்
காதலின் பெரும்பகுதி தாமிரபரணி ஆற்றில் தான் கலந்திருக்கிறது - யாருக்கும் தெரியாமல்
ஆற்றின் அடியில் படர்ந்திருக்கும் மணல் போல கரைந்திருக்கிறது - கரைய முடியாமல் படர்ந்திருக்கிறது
மௌனமாக. பல வருடங்களுக்குப் பிறகு இங்கு வந்திருக்கிறேன். இந்த ஆற்றைப் பற்றி பலமுறை
பலரிடம் வியந்து பேசியிருக்கிறேன். பேசி வியந்திருக்கிறேன். திருமணமான நாள் முதலே இங்கே
கூட்டிச் செல்லுமாறு பலமுறை இவள் நச்சரித்திருக்கிறாள். ஒவ்வொருமுறையும் ஏதாவது காரணம்
சொல்லித் தவிர்த்திருக்கிறேன். அவ்வாறு தவிர்க்கவில்லையெனில் ஏதேதோ நினைவுகளில் ஏங்கித்
தவித்திருப்பேன். இப்போதைப்போல.
காதல் நினைவுகளுக்கு
மனம்
வழி
மறப்பதேயில்லை
பகலும்,
இரவும்,
அவள் நினைவும்
மாறி மாறி வரும்
என் உலகின்
நிறங்கள்
மூன்று
மூச்சுவிட
முடியவில்லை. இங்கே வரவும் என்னவளின் நினைவுகள் பெருமழையில் பெருக்கெடுத்தோடும் வெள்ளம் போல் என்னிலிருந்து வெளியேற வழியின்றி திக்கித்
திணறிக் கொண்டிருக்கின்றன. என்னவள் என்றா சொன்னேன்? அதுவும் என் மனைவியைக் கண் முன்னே
வைத்துக்கொண்டு. எனக்கு முன்னால் குழந்தைகளுடன் இன்னொரு குழந்தையாய் சென்று கொண்டிருக்கிறாள்.
என் கண்களைப் பார்த்தால் கண்டு கொள்வாள். புதைந்திருந்த என்னவளின் ஞாபகங்கள் இங்கே
வரவும் புத்துயிர் பெற்று வெறி கொண்டு எட்டிப் பார்க்கின்றது ஒரு வெரூஉப் பூனையைப்
போல. மறுபடியும் என்னவள் என்று சொல்லிவிட்டேன். இதை நான் வேண்டுமென்றே செய்யவில்லை.
என் கட்டுப்பாட்டில் எதுவுமே இல்லை. நகுலனின் பாணியில் சொல்ல வேண்டுமென்றால் ‘நான்
கூட’. இறந்தகாலத்தில் என்னவள். நான் இறக்கும்
வரை என்னவள். ஆனால் அப்படிச் சொல்வது முறையாகுமா? தெரியவில்லை. இருந்தாலும் அவள் எப்போதும்
என்னவள் தான்.
மனைவியின்
கையைப் பிடித்துக் கொண்டேன். கைவிடப்பட்ட அல்லது கைவிடப்பட்டதாகக் கருத்தப்படும் ஒவ்வொருவருக்காகவும்
படைக்கப்பட்ட கை! என்னை ஏறிட்டு ஒரு முறை பார்த்துவிட்டு எதுவும் கூறாமல் நடக்க ஆரம்பித்தாள்.
நான் எப்போதும் போல் இல்லையென அவளுக்குத் தெரிந்திருக்கும். எதுவும் கேட்கவில்லை. சந்தோஷமாக
குழந்தை போல் இருந்தவளை தேவையில்லாமல் சங்கடப்படுத்திவிட்டேன். எல்லாம் என் சுயநலம்.
இங்கே ஒருவரின் சந்தோஷத்தைப் பறித்து தான் மற்றொருவர் சந்தோஷமாக இருக்க வேண்டி இருக்கின்றது.
இந்த மனநிலையில் அவள் என் அருகில் வேண்டும் போல தோன்றியது. நான் எதுவும் சிந்திக்கக்
கூடாது என்பதற்காகவும் கூட. எதுவும் பேசாமல் குழந்தைகளை வெற்றுப் பார்வை பார்த்த படி
நடந்து வந்தாள்.
"ஏன்
என்னை இவ்வளவு நாள் இங்க கூட்டிட்டு வரல?" என் கண்களைப் பார்த்தபடி கேட்டாள்.
இந்தக்
கேள்விக்கு பதில் சொல்ல வேண்டுமென்றால் என் 'இறந்த'காலம் முழுவதையும் திருப்பிப் பார்க்க
வேண்டும். பெரிதாக யோசிப்பதற்கு எதுவும் இல்லை. அந்த நினைவுகள் எல்லாம் மறந்தால் தானே?
"இப்போ
இந்த கேள்விக்கு கண்டிப்பா பதில் தெரியணுமா?" என்றேன்.
"என்னைப்
பத்தி நீங்க புரிஞ்சி வச்சிருக்றது அவ்வளவு தானா. இல்லனா இந்தக் கேள்விய கேட்ருக்கவே
மாட்டீங்க. நானும் நிறய தடவ கேக்கணும்ன்னு வந்து கேக்காமலே போய்ருக்கேன். உங்களுக்கே
எப்போ சொல்லணும்ன்னு தோணுதோ அப்ப சொல்லட்டும்ன்னு விட்டுட்டேன். ரெண்டு புள்ள பெத்தாச்சு.
ஆனா இன்னும் உங்க காதல் கதைய என் கிட்ட சொல்லணும்ன்னு தோணலயா. ஒவ்வொரு தடவ இங்க கூப்டும்
போதும் அபத்தமா காரணம் சொல்லி இங்க வர விடாம பண்ணிடுவீங்க. நான் என்ன அவ்வளவு மக்காங்க?
இப்போ கூட கேட்டிருக்க மாட்டேன். ஆனா உங்க முகத்த பாத்ததும் கேக்கணும் போல தோணுச்சு".
இதில்
ஒரு வார்த்தை கூட என்னைப் பார்த்து பேசவில்லை. நேரே பார்த்தபடி சொல்லிக்கொண்டிருந்தாள்.
நான் அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன். ஒரு வேளை என்னைப் பார்த்து பேசியிருந்தால் நான்
வேறெங்கோ பார்த்துக்கொண்டிருந்திருப்பேன். அவள் மனதில் ஊறிக் கிடந்த கேள்விகள். இது
வெறும் கேள்விகளா என்ன? கணவன் தன்னிடம் மறைக்கும் அளவிற்கு நாம் இருந்துவிட்டோமே என்னும்
வலி. அவள் பேசும் போது என் காதல் கதை என்று சொன்னாள். அது வெறும் கதையா? என் வலி அது.
ஏனோ யாரிடமும் அதைப் பகிர்ந்து கொள்ளவேண்டுமென எனக்குத் தோன்றியதில்லை. இவள் யாரோ ஒருத்தியா?
என் மனைவி தான். யாரோ ஒருத்தியுடன் கூட சொல்லிவிடலாம். மனைவியிடம் சொல்வது சரியாகுமா?
வலியை யாருக்கும் பகிர்ந்து கொடுக்க முடியாது. அடி பட்டக் காயத்தை பிய்த்துக் கொடுக்க
முடியுமா என்ன? பின் மனதின் காயத்தை மட்டும் எங்கே பகிர்ந்து கொள்வது?
திரும்பிப்
பார்த்தாள். மௌனமாகவே இருந்தேன். அவளுக்கு கோபம் வந்திருக்கக்கூடும். கோபம் என்பதை
விட வலித்திருக்கக்கூடும். கைகளை விடுவிக்க எத்தனித்தாள். அவள் கைகளை விட்டுவிட வேண்டுமென
எனக்குத் தோன்றவில்லை. இறுக்கமாகப் பிடித்துக்கொண்டேன். லேசாக அவள் கண் கலங்குவது போல
இருந்தது. குழந்தைகளைக் கண் காட்டி வேண்டாமென்று தலையசைத்தேன்.
கண்களில்
நீர் வழிய "ஐ லவ் யூ" என்றாள். சப்தமே இல்லாமல்.
~~OO~~
பாபநாசம்
என்று டிக்கெட் எடுத்தால், சிவன் கோவிலின் இடப்புறம்தான் இறக்கிவிடுவார்கள். ஊர்க்காரர்களை
விட சுற்றுலாப் பயணிகளையே இங்கு அதிகம் பார்க்கமுடியும். சொந்த ஊரின் அருமை யாருக்குத்தான்
தெரிகிறது! மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் கம்பீரமாக வீற்றிருக்கும் இந்த சிவன்
கோவிலின் நடை வாசலுக்கு பேருந்திலிருந்து இறங்கி இரண்டடி எடுத்து வைத்தால் வந்துவிடலாம்.
கோவிலின் நடைக்கு முன்னே ஒரு மடம் இருக்கும். அங்கு கழுத்தில் ருத்திராட்ச்சையுடனும்
கையில் திருவோட்டுடனும் இருக்கும் காவி உடைச் சாமியார்களை உள்ளூர்காரர்கள் பண்டாரம் என்று அழைப்பார்கள். அந்த
மடத்திற்கே ‘பண்டார மடம்’ என்றுதான் பெயர். சரியாகப் படிக்காமல் ஊர் சுற்றிக் கொண்டிருக்கும்
பிள்ளைகளைப் பார்த்து, இழுவையாக 'இப்படியே சுத்திக்கிட்டு இருந்தன்னா, பண்டாஆஆஆர மடத்துல
போயி பண்டாஆஆஆரமா தான் உக்காரணும்' என்று சொல்வார்கள். ஆனால் அந்த சிவன் கோவில், மடம்,
பிரம்மாண்டமான மரங்கள், படித்துறை இதையெல்லாம் பார்க்கும் பொழுது பண்டாரமாகவே போய்விடலாம்
என்று எண்ணத் தோன்றும்.
நாவல்
மரங்களிலிருந்த குரங்குகள் நாவல் பழங்களை குழந்தைகளுக்காக உதிர்த்துப் போட்டுக் கொண்டிருக்கும்.
இந்த நாவல் மரத்தினடியிலமர்ந்து நாவல் வாசிப்பதே பரம சுகம்.
காட்டைக்
கிழித்து தாமிரபரணி சீறிப் பாய்ந்து கொண்டிருப்பதை போலவே, காட்டை சிதைத்துக் கட்டிடங்களும்
சாலைகளும் அமைக்கப்பட்டிருக்கும் - நாம் அந்த ஆற்றின் எழிழை ரசிப்பதற்காக!
இந்தக்
கோவிலிருந்து சிறிது தொலைவிலே இருக்கும் திருவள்ளுவர் கல்லூரியில் தான் பிஏ சேர்ந்தேன்.
முதல் நாள் வகுப்பிற்கு தாமதமாக வர நேர்ந்தது. உள்ளே நுழையவும் எல்லோரும் 'ஊ' என்று
ஊளையிட, அதை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் திணறிக் கொண்டிருந்தேன். முதல் வரிசை
மட்டும் காலியாக இருந்தது. எல்லா கண்களும் என்னை மொய்ப்பதாகத் தோன்றியது. வலப்புறம்
ஒரு முறை ஏறிட்டு பார்த்தேன். அந்தப் பார்வை தான் என் வாழ்வைப் புரட்டிப் போடப் போகிறதென்று
அன்று நான் நினைத்திருக்க நிச்சயம் வாய்ப்பில்லை. உதட்டில் புன்னகையுடன் முட்ட முட்டக்
கண்களுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் அவள். இவ்வளவு வருடம் நான் இந்த ஊரில் தான் இருந்திருக்கிறேன்,
ஆனால் அவளை இதற்கு முன் வரை ஒரு நாள் கூட எங்கள் ஊரில் பார்த்தது கிடையாது. இது தான்
விதியோ? ஏதேர்ச்சையாகப் பார்க்கவும் இருவரின் விழிகளும் சந்தித்து சில நொடிகள் நிலைத்து
நின்று, என்ன செய்வதென்று புரியாமல் எங்கெங்கோ பார்த்து, அவ்வப்போது சந்தித்து, அதை
எண்ணி தினம் தினம் கொஞ்சம் கொஞ்சமா செத்துப் பிழைத்து…
இன்னும் ஒருமுறை
இன்னும் ஒருமுறை
என்று
உன்னைப் பார்த்துக்கொண்டே
இருக்கும் கண்களைச்
சமாதானம் செய்து
அழைத்துச் செல்கிறது
கனவு
இயந்திரம்
போல வேறெதுவும் செய்யாமல் பார்த்துக்கொண்டு மட்டுமே இருந்தோம். இயந்திரம் பழுதடையாமல் ஓடியது. சில பல நாட்கள் ஊர்ந்தன.
கல்லூரியில்
நடந்த இலக்கிய விழாவிற்காக சுத்திக் கொண்டிருக்கையில் 'நானா வந்து பேச முடியும். நீ
தான்டா எரும வந்து பேசனும்' என்பது போலப் பார்த்துக் கொண்டிருந்தாள்; அவளது கண்ணாடித்
தோழியுடன். நேரில் பேச தைரியம் வரவில்லை. மனதைத் திடப்படுத்திக் கொண்டு அவளிடம் பேசுவது
போல் போய்க் கடந்து சென்று விடுவேன். அன்று மட்டும் பலமுறை இது நடந்தது. பலமுறை பேசுவதற்கு
வாய்ப்பு கிடைத்த போதும் என்னால் அடுத்த அடி எடுத்து வைக்க முடியவில்லை. அந்த விழா
முடிந்து அவள் செல்கையில் வீடு வரை பின்னாலேயே சென்றேன். அதைத் தவிர என்னால் வேறு ஏதும்
செய்ய முடியவில்லை. என் மேல் எனக்கே உச்சக்கட்ட வெறுப்பு வந்தது அன்றுதான்.
நான்
கோழை என்பதை நிரூபிக்கும் வண்ணம் ஒரு நாள் என்னைக் கடந்து செல்கையில் என் கையிலே சிறு
காகிதத் துண்டை தந்துவிட்டுப் போனாள்.
‘9894967434’
அன்று
நண்பர்களுக்கு என் செலவில் வடை.
அவ்வளவாக
மொபைல் ஃபோனின் ஆதிக்கம் இல்லாத காலம் என்பதால் அந்த எண்ணை அழைத்தாலோ அல்லது குறுஞ்செய்தி
அனுப்பினாலோ ஏதேனும் பிரச்சனை வந்து விடுமோ என்ற பயம் வேறு. என் கோழைத்தனத்தை...
‘ஹாய்…’
'யாரு?'
'நான்
தான்…'
'நான்
தான்னா?'
'ப்ரியா
தான?'
'இல்ல.
நான் அவளோட அண்ணன். நீங்க யாரு?'
'என்ன
பதிலே காணும்?'
'ஹலோ'
'நான்
ப்ரியாவோட ஃப்ரண்ட் சுமதி… நான் மெஸேஜ் பண்ணேன்னு சொல்லிடுங்க…'
'ஹே.
நான் ப்ரியா தான். சும்மா விளயாடினேன் :P பயந்துட்டீங்களா?'
'இல்லயே...
நானும் விளயாட தான் செஞ்சேன்…'
'நம்பிட்டேன்
:D'
':)
என்ன பண்றீங்க?'
'சும்மா
தான் இருக்கேன். நீங்க?'
'நான்
பாட்டு கேட்டுட்டு இருக்கேன்... ஏ ஆர் ரஹ்மான் சாங்ஸ்...'
'ஓ.
எனக்கும் ரஹ்மான் சாங்ஸ் ரொம்ப புடிக்கும்'
'அப்படியா?
எனக்கு ரஹ்மான்னா உயிர்...'
'வேற
என்னலாம் உங்களுக்கு புடிக்கும்?’
'நீங்க
வாங்கலாம் வேண்டாமே... சும்மா நீ வான்னே பேசலாமே...'
'நீங்களும்
நீங்க வாங்கன்னு தான பேசுறீங்க?'
'சரி
இனி பேசல... டீல்?'
'டீல்
டீல் :)'
':)'
'உன்
வைஃப் நீ வான்னு கூப்ட்டா பரவாலயா 'டா' :)'
'அவ
என்ன விட எவ்வளவு சின்ன வயசா இருந்தாலும் அப்படி தான் கூப்டணும்ன்னு நினைக்கிறேன்'டா'
:D'
'ம்ம்ம்ம்
குட் டா :)'
எங்களுக்குள்ளான
உறவு குறுஞ்செய்தி வழியே நடந்து கொண்டிருந்தது. ஒரு நாள் 'நேரில் சந்தித்து பேசலாமா'
என்று அவள் தான் கேட்டாள். மறுபடியும் மறுபடியும் நான் கோழை என்பதை பல இடங்களில் நினைவூட்டிக்கொண்டிருந்தாள்.
கல்லூரியில் பேச வேண்டாமென்றும் நாம் பேசிக் கொள்வதை வேறு யாரிடமும் சொல்ல வேண்டாமென்றும்
சொல்லியிருந்தாள்.
காலை
8 மணிக்கு வந்து விடுவதாகச் சொன்னாள். பாபநாசம் தலையணை அருகே காத்திருந்தேன். மனதிற்குள்
இப்படியெல்லாம் பேச வேண்டுமென பலமுறை ஒத்திகை பார்த்தவாறே இருந்தேன்.
நீல
நிறச் சுடிதாரில் நடந்து வந்து கொண்டிருந்தாள். தூரத்திலேயே அவள் முகம் சிரிப்பது தெரிந்தது
- கொஞ்சம் பயம் கலந்து. சுடிதார் அவளுக்கு கச்சிதமாக இருந்தது. ஒருவரின் உடையை வைத்தே
அவர்களின் ரசனையைத் தெரிந்து கொள்ள முடியுமென்பது என் எண்ணம். சரியான பொருளைத் தேர்ந்தெடுப்பதில்
கெட்டிக்காரி என்றே தோன்றியது. ‘பிறகு எப்படி உன்னைத் தேர்ந்தெடுத்தாள்?’ என்று கேட்காதீர்கள்.
அதற்கான விடை எனக்கே தெரியாது. நிச்சயம் எங்கள் திருமணத்தின் போது 'இவனுக்கு இப்படி
ஒரு பொண்டாட்டியா?’ என்று யாரும் கேட்காமல் இருக்க முடியாது. கேட்க மனமில்லாமல் போனாலும்
கூட அப்படி நினைக்காமல் யாராலும் இருக்க முடியாது என்பதை நான் ஒப்புக்கொள்ள வேண்டும்.
அந்த அழகிற்காக அவளை எனக்குப் பிடிக்கவில்லை. அந்த அழகைப் பற்றிய கர்வம் துளியும் அவளிடத்தே
கிடையாது. அது தான் என்னைக் கவர்ந்ததாக நினைக்கிறேன்.
இவ்வளவு
நேரம் எதுவும் தோன்றவில்லை. அவளைப் பார்க்கவும் மூத்திரம் முட்டிக் கொண்டுவந்தது. என்ன
காரணம் என்று தெரியவில்லை. இதை அடக்கிக் கொண்டே எப்படி அவளுடன் நேரத்தை செலவிடப் போகிறேன்
என்கிற பயம் வேறு இப்போது சேர்ந்து கொண்டது.
ஆற்றை
வெறித்துப் பார்த்த படி வெகு நேரம் உட்கார்ந்திருந்தோம். ஏற்கனவே தயார் செய்த எதுவும்
வெளி வரவில்லை. ஒத்திகையெல்லாம் காலை வாரிவிட்டது.
இருவரும்
இதுவரை காதலைச் சொன்னதில்லை. ஆனால் காதலிப்பதாகவே உணர்ந்திருந்தோம்.
காதல்
தெய்வமென்று ஏதும் இருக்குமென நினைக்கிறேன். எங்கள் மௌனத்தை கலைத்து பேச வைப்பதற்காக
பூக்காரி அங்கே வந்தாள்.
"கட்டிக்க
போறவளுக்கு பூ வாங்கி கொடுங்க தம்பி" என்றாள்.
அவள்
என்னைத் திரும்பி பார்க்கவும் பூக்காரியைப் பார்த்து "அதெல்லாம் வேணாம். கிளம்புங்க"
என்றேன். 'ஒரு வேளை அவளுக்கு பூ பிடிக்கலாம் அல்லவா' என்ற எண்ணம் தோன்றவும் அவளை நோக்கி
"வேண்டுமா?" என்றேன்.
வேண்டாமென
அவசரமாகத் தலையாட்டினாள்.
இனி
பூக்காரி சும்மா விடுவாளா? "விஜய் மாதிரி இருக்கிறீங்க. பொண்ணு மகாலட்சுமி மாதிரி
இருக்கு. பூ வாங்கிக் கொடுங்க தம்பி".
இருவரும்
ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டோம். இப்போது அந்த பூக்காரியின் மனத்தில் என்ன
ஓடியிருக்கும்? 'அவள் மகாலட்சுமி சரி. இவனையெல்லாம் விஜய்ன்னு சொல்ல வேண்டி இருக்கே.
என்ன மானங்கெட்டப் பொழப்பு?' என்று நினைத்திருப்பாள்.
"இரும்மா,
நான் வச்சி விட்றேன்" என அவள் அனுமதி இன்றி பலவந்தப்படுத்தினாள்.
இந்த
வன் கொடுமையை எப்படி எதிர் கொள்வதென்று எனக்குத் தெரியவில்லை. "அக்கா தயவுசெஞ்சு
கிளம்புங்க. கடுப்பேத்தாதீங்க" என்றேன் ஆவேசமாக.
"என்ன
தம்பி கோவபட்றீங்க?"
அவள்,
"விடு விடு" என்று சொல்லி பூவிற்கு காசு கொடுத்தாள்.
"நீங்க
காசு கொடுங்க தம்பி" என்றாள் பூக்காரி என்னைப் பார்த்து.
"இல்ல
இருக்கட்டும்"
பூக்காரி
செல்லவும் "கோவப்படாத" என்று சொல்லி புன்னகைத்து "வா, தண்ணில கால் நனச்சிட்டு
வரலாம்" என்றாள்.
சுடிதார்
நனையக் கூடாது என்பதற்காக இரு கைகளாலும் இழுத்துப் பிடித்து நடந்து வந்தாள் ஒரு சிறுமியைப்
போல. அவளது ஆடை லேசாக என் மேல் படவும் ஒரு வித சிலிர்ப்பு. மனதிற்குள் சாரல். அந்த
இன்பத்தில் திளைத்து முடிப்பதற்குள் கால் வழுக்கி விட என் கைகளை ஒரு நொடி பிடித்துச்
சென்றாள்.
அவள்
ஆடை என் மேல் பட்ட - விரல்கள் என்னைத் தொட்ட நிமிடங்கள் என்னை எரித்தாலும் அழியாது.
மீண்டும்
பழைய இடத்திற்கு வந்து ஏதேதோ ஒன்றுக்கும் உதவாத விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தோம்.
ஊரில்
காதல் ஜோடிகளைப் பார்ப்பதெல்லாம் அபூர்வம். எல்லாருடைய கவனமும் எங்கள் மேலே இருப்பதாக
உணர்ந்தேன். நாலைந்து இளைஞர்கள் எங்களைக் கடந்து செல்லும் போது ஒருவன் மட்டும் 'மணி
என்ன?' என்றான்.
“ஒம்போது”
என்றேன்.
"டேய்,
ஒம்போதாம்டா" என்று சிரித்துச் சென்றார்கள்.
இந்த
தர்ம சங்கடமான நிலையை எப்படி எதிர் கொள்வதென்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தேன்.
இனி இங்கே வரவே கூடாது என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டேன். ஆனால் அந்தத் பாபநாசம்
தலையணையிலுள்ள மரத்தின் நிழலில் தான் எங்கள் காதல் செழித்து வளர்ந்து கொண்டிருந்தது.
‘சரி
டா... தூங்கு... குட் நைட்.... உம்ம்மா...’
'எங்க
கொடுத்த?'
'விரலால
உன் உதட்ட வருடிட்டே நீ சிரிக்கும் போது, கீழ் உதட்டுல கொடுத்தேன்…’
'இப்படிலாம்
சொன்னா எனக்கு நிஜமாவே வேணும் :('
'நான்
ரெடி டா...'
'போ
அதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் தான் :D'
'ஹ்ம்ம்ம்
:('
'கோவப்படாதடா.
உம்ம்ம்ம்ம்ம்ம்மா'
':):):)
நீ எங்க கொடுத்த? :)'
'ஒரு
கை விரல்களால உன் கை விரல்களோட கோர்த்து இன்னொரு கையால உன் தல முடிய லேசா வருடி, உன்
காதுல இருக்கமா ஒரு முத்தம். அப்புறம் லிப்ஸ்ல மூச்சு விடாம அழுத்தமா ஒரு லாங் கிஸ்'
முத்தம் -
ஒரு அழகிய
முரண்
குடுக்க குடுக்க
நாமே கடனாளியாகிறோம்
'நீ
செம்ம ரொமான்டிக் டா!'
'ரொமான்ஸ்
ஒரு மாஜிக் டா. சீக்கிரமே நான் பைத்தியம் ஆயிடுவேன்னு நினைக்கிறேன்'
'நான்
ஏற்கனவே அப்டி ஆயிட்டேன்... எல்லாம் உன்னால...'
'நாளை
உன்னைப் பார்க்க எதிர்பார்ப்போடு உறங்கச் செல்லும் முன்... குட் நைட் :)'
'சீக்கிரம்
விடியனும்... குட் நைட்...'
எவ்வளவோ
கவனமாக இருந்தும் அவள் தந்தையின் காதிற்கு இந்த விஷயம் போயிருக்கிறது. ஒரு மாலை வீட்டிற்குச்
செல்லவும் கையில் நான் கொடுத்த வாழ்த்து அட்டையுடன் அவள் தந்தை நின்றிருக்கிறார்.
"என்ன
இது?"
“….”
அதைக்
கிழித்து அவள் முகத்தில் எறிந்து விட்டு வேகமாக வீட்டை விட்டு வெளியேறியிருக்கிறார்.
அவள்
அம்மா, "என்னடி இப்படி பண்ணிட்டு அலையுற? வயசுக்கு வந்து மூனு வருஷம் தான் ஆகுது
அதுக்குள்ள உனக்கு ஆம்பள சுகம் கேக்குதோ? என்னத்த காட்டிடி அவன் உன்ன மயக்குனான்? இல்ல
நீ என்னத்த காட்டி அவன மயக்குன? இதுக்கு தான் உன்ன காலேஜிக்கு அனுப்புறமா? ஆம்பள சுகம்
கேக்குது வாரிய கொண்டைக்கு"
சில
நாட்களில் எதிர் பார்த்ததைப் போல அவள் கல்லூரி வருவது நின்றது. மாப்பிள்ளை பார்ப்பதாகவும்
செய்தி வந்தது.
தினம்
தினம் சண்டை போட்டுக் கொண்டிருப்பதாகச் சொன்னாள். என்னால் என்ன ஆறுதல் கூற முடியும்?
'உன்னத் தவிர வேற யாரயும் நெனச்சி கூட என்னால பாக்க முடியாது. நான் வீட்ல பேசுறேன்.
நீயும் உங்க வீட்ல சொல்லு' என்று திரும்பத் திரும்ப சொல்கிறாள்.
என்
வீட்டில் இதைப் பற்றி பேசும் வயதில்லை. ஒரு அண்ணன் இருக்கிறான். தங்கை இருக்கிறாள்.
என் கோழைத்தனத்தை மீண்டும் மீண்டும் நினைவூட்டிய வண்ணமிருக்கிறாள். அவளுக்கும் திருமணமாகாத
ஒரு அக்கா இருக்கிறாள். அவளுக்கிருக்கும் தைரியம் எனக்கு ஏன் இல்லை?
எங்கேயாவது
போய் செத்து விடலாமா என்று தோன்றியது. இதற்கே தைரியம் இல்லை. அதற்கு எங்கே? கோழைப்
பிறவி.
ஆனால்,
சில நாட்களில் அவள் தற்கொலை முயற்சி செய்து கொண்டதாகவும் மருத்துவமனையிலிருப்பதாகவும்
நண்பன் சொன்னான். நானும் அவனும் அவளைப் பார்ப்பதற்காகச் சென்றோம்.
என்னைப்
பார்த்ததும் சிரிக்கிறாள்.
என்னால்
எப்படி அந்த சூழலைக் கையாள்வது என்று தெரியாமல் குழம்பிக் கலங்கிப் போயிருந்தேன். நான்
எதிர் பார்த்தது போல் அவர்களின் பெற்றோர்கள் நடந்து கொள்ளவில்லை. அமைதியாகவே பேசினார்கள்.
வீட்டிலிருந்து வந்து பேசும் படி சொன்னார்கள். அவள் முகத்தை திரும்பிப் பார்த்தேன்.
நான் என்ன சொல்ல போகிறேன் என்று பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவள்
குணமாகி வந்த பின் வீட்டிற்குச் சென்று பேசினோம். அவள்
தந்தை, "கல்யாணத்த உடனே முடிக்கணும். அவ அக்கா இருக்கிறா. இருந்தாலும் இவளுக்கு
முன்னாடி முடிக்கிறத பத்தி எனக்கு கவல இல்ல. நான் பெருசா ஏதும் அவளுக்கு சேக்கல. அதனால
எதும் போடுவோம்ன்னு எதிர் பாக்காதீங்க"
எவ்வளவு
பேசிப் பார்த்தும் அவர் சமாதானம் கொள்வதாக இல்லை. எப்படியும் நாங்கள் இதற்கு ஒத்துக்கொள்ள
மாட்டோம் என்று நினைக்கிறார் போலும்.
நான்,
"நான் இப்போ தான் படிச்சிட்டு இருக்கேன். மூணு வருஷம் டைம் கொடுங்க. அதுக்கு மேல
நீங்க ஒரு நாள் கூட பொறுத்துக்க வேண்டாம்" என்றேன்.
மூன்று
வருடத்தில் அவளைத் திருமணம் செய்து கொள்வதென்பதும் சாத்தியமே இல்லை தான். இருந்தாலும்
அதற்குள் என்ன மாற்றம் வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற நப்பாசை.
அவர்
அந்த வரிகளில் ஒரு வரி கூட மாறாமல் மறுபடியும் மறுபடியும் சொல்லிக் கொண்டிருந்தார்.
பேசிவிட்டு சொல்கிறோம் என்று அங்கிருந்து கிளம்பினோம்.
அப்பா,
"என்னப்பா சொல்ற?"
"தெரியலப்பா"
"அவங்க
எப்படியாவது கழட்டி விடனும்னு பேசுற மாதிரி தான் இருக்கு. எனக்கென்னமோ சரியா வரும்ன்னு
தோணல"
"இல்லப்பா.
அவ இல்லனா என்னால முடியாது. இப்போவே வேலைக்கு போக ஆரம்பிச்சிடம்னா நல்லா இருக்கும்ப்பா.
நான் படிகிறத நிப்பாடிட்றேன்"
"எலேய்,
சினிமா வசனம்லாம் பேசிகிட்டு அலயாத சரியா? நீ சொல்றன்னு தான் அங்க வந்து பேசினேன்.
அதுவே ஜாஸ்தி. இத பத்தி பேசுறத இத்தோட விட்ரு. வயசுக்கு வந்த தங்கச்சி இருக்கா, அண்ணன்
இருக்கான். மனசுல வச்சிக்க" கூறிவிட்டு எனக்கு முன்னால் வேகமாகச் சென்று விட்டார்.
அவளோ
படாத பாடுபட்டுக்கொண்டிருந்தாள். ‘நீ மட்டும் தான் தற்கொலை செய்து கொள்வாயா? நானும்
செய்து கொள்கிறேன்’ என்று அவள் அம்மா ஆவேசமாகவும், தந்தையோ அவள் காலில் விழுந்து கெஞ்சியும்
மூளைச்சலவை செய்தார்கள். பாவம் அவள் என்ன செய்வாள். ஓரிரு நாட்களில் குடும்பத்தோடு
வேறொரு ஊருக்கு சென்று விட்டார்கள். அதன் பின் எனக்கும் அவளுக்கும் எந்தத் தொடர்பும்
இல்லை. அவள் இருந்த ஊர், வீடு, மொபைல் நம்பர் எல்லாமே தெரிய வந்தது. மீண்டும் அவள்
வாழ்வில் குறுக்கிட்டு சீரழிக்க விரும்பவில்லை. ஏற்கனவே சீரழித்தது போதும்.
அதன்
பிறகு வெகு நாட்கள் பாபநாசம் தலையணைக்கு வந்து தனியே நின்று கொண்டிருப்பேன். ஒரு கட்டத்தில்
இங்கு வருவது சரி அல்ல என்று முடிவு செய்து நிறுத்திக்கொண்டேன்.
மணலால் பிண்ணப்பட்ட
வலையை விரித்து
எனக்காய் காத்திருக்கிறது
இவ்வாற்றின் அருகே
என் காதல் நினைவுகள்
வலையோடு
பறக்க வல்ல
இறகுகளோடு
இம்முறை வந்திருப்பதையறிந்து
காதல் நதி
என்னை
மீனாய்
மாற்றிக்கொண்டிருக்கிறது
~~OO~~
பல
ஆண்டுகளுக்குப் பிறகு இன்று தான் வருகிறேன் மனைவியுடன். அவளுடன் இருக்கும் பல நேரங்களில்
நான் ப்ரியாவை நினைக்காமலிருந்ததில்லை. இதையெல்லாம் என் மனைவியிடம் சொன்னால், சொன்ன
அடுத்த நொடியிலிருந்து நடை பிணமாகத் தான் அலைந்து கொண்டிருப்பாள், என்னைப் போல. ஏற்கனவே
ஒரு பெண்ணிற்கு செய்த துரோகம் போதாதா?
'இதற்கு
மேலும் சொல்லாமல் இருப்பது சரி அல்ல. எல்லாவற்றையும் சொல்லி விடுகிறேன்' என்பது போல
முக பாவனையை வைத்துக் கொண்டு பேச ஆரம்பித்தேன்.
"காதல்
கதை அது இதுன்னு சொன்னியே, அதெல்லாம் எதுவும் கிடையாது. என்ன யாராவது காதலிப்பாங்களா?”
என்று சொல்லி பெருமூச்சு விட்ட படி “என்னோட ஃப்ரண்ட் முத்து தெரியும்ல. அவனோட ஃப்ர்ண்ட்ஸ்
கொஞ்ச பேர் வெளியூர்ல இருந்து நம்ம ஊர சுத்தி பாக்க வந்துருந்தாங்க. முத்துக்கு நீச்சல்
தெரியாது. என்ன நம்பி தான் அவங்கலயெல்லாம் கூட்டிட்டு வந்தான். பல தடவ என் கிட்ட கேட்டான்.
அப்படி என்ன நம்மள மீறி ஆயிட போகுதுன்னு நான் தான் உறுதியா வர சொன்னது. ஆனா விதி சும்மா
விடுமா? யாரோட விதியோ அது. அந்த நாள நெனச்சா இப்பவும் எனக்கு நடுங்குது. அந்த இடத்துல
தான்..."
"நீங்க
அழாதீங்க ப்ளீஸ். என்னால தாங்கிக்க முடியாது "
இதுவும்
என் வாழ்வில் நடந்த சம்பவம் தான். ஆனால் இதற்கு தான் நான் இங்கே வருவதற்கு தயங்கினேன்
என்று அவள் நம்பியிருப்பாளா என்பது சந்தேகம் தான். ஆனால் நம்பியது போல் அவள் இனி நடந்து
கொள்வாள்.
தாமிரபரணியிலே
நீராடி விட்டு மகிழ்ச்சியோடு கிளம்பினோம். தள்ளு வண்டியில் சூடாக வடை, பஜ்ஜி, போண்டா
எல்லாம் இருந்தது.
"சின்ன
வயசுல குளிச்சி முடிச்சிட்டு போகும் போது வடை போண்டா சாப்டாம போக மாட்டோம். அது ஒரு
தனி ருசி தான்" என்றேன்.
"அப்பா
அப்பா எனக்கும் வாங்கி கொடுங்கப்பா"
ஆளுக்கொரு
போண்டா வாங்கி சாப்பிட ஆரம்பிக்கவும் வழக்கம் போல குரங்கு அதைப் பிடுங்க வந்ததது. என்னைத்
தவிர மீதி மூவரும் அதற்கு பயந்து கீழே போட்டுவிட்டனர். குரங்கு வந்தால் அதை வாயில்
போட்டுக் கொள்ள வேண்டுமென்று அவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை தான். அனிச்சை
செயலாய் நான் முழு முட்டை போண்டாவையும் வாயில் போட்டிருந்தேன்.
என்னைப்
பார்த்து இளைய மகன் பெருங்குரலெடுத்து சிரித்தவாறு "அப்பா குரங்கு மாதிரியே இருக்கீங்க"
என்றான்.
- த.ராஜன்