சமீபத்திய பதிவுகள்

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

10 October 2014

[புத்தகம்] பாத்துமாவின் ஆடு

கடல் சார்ந்த நாவல்களை வாசித்துக்கொண்டிருக்கிறேன். ஜோ டி குரூஸின் 'ஆழி சூழ் உலகு', வண்ணநிலவனின் 'கடல்புரத்தில்', ஜான் பான்வில்லின் 'கடல்' மற்றும் ப.சிங்காரத்தின் 'கடலுக்கு அப்பால்' வாசித்து முடித்தாகிவிட்டது. இந்த நான்கு நாவல்களிலும் துயரம் கொட்டிக் கிடப்பதால் எனக்குள்ளும் தொடர்ந்து ஏதோ பாரம் அழுத்துவது போலவே இருந்தது. அதனால் ஒரு மாறுதலுக்காக வைக்கம் முகமது பஷீரின் 'பாத்துமாவின் ஆடு' நாவலை எடுத்தேன். இது ஒரு 100 பக்க குறுநாவல் என்பது தான் ஒரே காரணமே தவிர, இது ஒரு நகைச்சுவை சார்ந்த நாவல் என்பது முன்னரே தெரியாது.


இந்த நாவல் வைக்கம் முகம்மது பஷீரின் வாழ்வில் நடந்த உண்மைச் சம்பவம் என்று முன்னுரையில் குறிப்பிடுகிறார். நான்கைந்து தம்பி தங்கைகள் அவர்களின் ஏழெட்டு குழந்தைகள் என ஒரு பெரும் கூட்டமே ஒரு சிறிய வீட்டில் குடியிருக்கிறது. கூடவே கோழிகள், அகதிப் பூனைகள் மற்றும் அவர் தங்கை பாத்துமாவின் ஆடு. தேசாந்திரியாகத் திரிந்து வீட்டிற்கு வந்திருக்கும் பொழுது நடைபெறும் ஒரு சில மாதங்களின் நிகழ்வுகளை நகைச்சுவை உணர்வுடன் இந்நாவலில் சித்தரித்திருக்கிறார்.

பஷீரின் அறையில் ஏதோ சத்தம் கேட்டு ஜன்னல் வழியே எட்டிப் பார்ப்பார். அவரது தங்கை பாத்துமாவின் ஆடு, அவர் எழுதிய 'பால்யகால சகி' மற்றும் 'சப்தங்கள்' நாவலைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கும். அது வரை சும்மா நின்று கொண்டிருந்தவர், அவர் படுக்கையிலிருக்கும் போர்வையை சாப்பிட ஆரம்பிக்கவும் "அத சாப்பிடாத. எங்கிட்ட வேற பிரதி இல்ல. நான் அப்புறமா என்னோட 'உலகப் புகழ்பெற்ற மூக்கு' நாவலைத் தரேன்" என்று சொல்வார். சொன்னது போல பின்னொருநாளில் அந்த நாவலை உண்ணவும் கொடுக்கிறார்.

பள்ளி செல்லும் குழந்தைகள் தினமும் அவரது வீட்டைக் கடக்கும் போது அவரைப் பார்த்துவிட்டு தங்களுக்குள் முணுமுணுத்துக் கொண்டு செல்வர். தன்னிடம் வந்து குழந்தைகள் ஆட்டோகிராப் வாங்க ஆசைப்படுகிறார்கள் என தனக்குள்ளாக அவர் கற்பனை செய்து கொள்வார். அதே போல் ஒரு நாள் அவரை நோக்கி சிறுமிகள் வரவும் இவரும் ஆட்டோகிராப் தருவதற்கு ஆயத்தமாவார். குழந்தைகளோ அவர் வீட்டிலிருக்கும் சம்பங்காய்களை வாங்குவதற்காக வந்திருப்பார்கள்.

இந்த இடங்களிலெல்லாம் பஷீரின் நையாண்டி அல்டிமேட்.

ஆட்டிற்கு புத்தகத்தைத் தின்னக் கொடுக்கும் பஷீர், தன் போர்வையைத் தின்னத் தொடங்கும் போது பதறுகிறார் - எழுத்தாளரைக் கண்டு கொள்ளாமல் செல்லும் சிறுமிகள் - இது போல் பல காட்சிகளில் நாம் மனம் விட்டுச் சிரித்தாலும் அதில் ஒளிந்திருக்கும் சோகம் சொல்லி மாளாதது. நாவல் முழுவதும் அவர் பேசும் விஷயங்கள் அனைத்தும் துயரம் சார்ந்த அம்சங்களே. இதே கதையை நான் எழுதியிருந்தால் ஒரு அழுகுணி நாவலாகவே இருந்திருக்கும். தன் துயரத்தின் உச்சத்தையும் நகைச்சுவையாக சித்தரிக்க முடிந்ததே இந்த நாவலின் வெற்றி என்று எனக்குத் தோன்றுகிறது.

வாசித்துப் பாருங்களேன். வைக்கம் முகம்மது பஷீர் மலையாளத்தில் எழுதி குளச்சல் மு யூசஃப்பின் அருமையான மொழிபெயர்ப்பில் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. விலை: 90.


- த.ராஜன்

கடல்

கடலிற்கும் எனக்கும் ஏதோ பூர்வ ஜென்ம பந்தமிருக்குமென்று நினைக்கிறேன். கடலின் மீது எப்போதும் ஒரு வித மயக்கம். என்னுள் புதைந்து கிடைந்த கடலின் மீதான காதலைத் தட்டி எழுப்பியது ஜோ டி குருஸின் 'ஆழி சூழ் உலகு' நாவல். கடலின் மீதும் கடல் சார்ந்து வாழும் மீனவர்கள் மீதும் காதல் வயப்படச் செய்துவிட்டார் ஜோ டி குருஸ். கடல் சார்ந்த எல்லா நாவல்களையும் வாசித்து விட வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறேன்.

நான் அறிந்த கடல் சார்ந்த நாவல்கள்.

கடலுக்கு அப்பால் - .சிங்காரம்
புயலிலே ஒரு தோணி - .சிங்காரம்
கடல்புரத்தில் - வண்ணநிலவன்
ஆழி சூழ் உலகு - ஜோ டி குருஸ்
கொற்கை - ஜோ டி குருஸ்
கிழவனும் கடலும் - எர்னெஸ்ட் ஹெமிங்வே
கடல் - ஜான் பான்வில்
கடல் புறாசாண்டில்யன்
தண்ணீர் தேசம்வைரமுத்து

என் குடும்பத்தில் ஐம்பது சதவிகிதம் கிறிஸ்தவர்களாகவும் ஐம்பது சதவிகிதம் இந்துவாகவும் இருப்பதால் இரண்டு மதங்களின் வழிபாட்டையும் ருசித்திருக்கிறேன். சிறு வயதில் வருடா வருடம் குடும்பத்தோடு உவரி செல்வது வழக்கம். பத்து பதினைந்து பேர் வேன் பிடித்து அங்கு சென்று இரண்டு மூன்று நாட்கள் தங்கி வருவோம். திருநெல்வேலியிலிருந்து இரண்டு மணி நேரப் பயணத்தில் உவரியை அடையலாம். ஆழி சூழ் உலகு நாவலில் ஆமந்துறை என்னும் ஊர் கதைக் களமாக வருகிறது. நாவலில் வரும் சர்ச்சையும் நல்ல தண்ணீர் கிணறையும் கதை மாந்தர்களின் குடும்பத்தையும் விவரிக்கும் போது நான் பார்த்து ரசித்த உவரியை மனதில் கற்பனை செய்து கொண்டேன்.



இது உவரியின் மெயின் சர்ச். மன நலம் பாதிக்கப்பட்டவர்கள், பெற்றெடுத்தவர்களால் கை விடப்பட்ட முதியோர்களை இங்கு அதிகம் பார்க்கலாம். ஆலயத்திற்கு இடது புறம், சுற்றுலாப் பயணிகள் வந்து தங்குவதற்கு அறைகள் கிடைக்கும். அதிகாலையில் எழுந்து ஃப்ரஷ்ஷாக மீன் வாங்கி சமைத்து சாப்பிடுவோம். கடலில் குத்தாட்டம் போட்டு விட்டு கோவிலின் பின்புறத்திலிருக்கும் நல்ல தண்ணீர் கிணற்றில் சென்று குளித்து வருவோம். இவையெல்லாம் நடந்து பல வருடங்கள் ஆன பின்பும் இன்றும் மனதில் அழியாச் சித்திரமாக இருக்கின்றது. இதையெல்லாம் நினைக்கும் போது மீண்டும் இனி எப்போது அங்கே செல்வோம் என்ற ஏக்கம் நெஞ்சை அழுத்துகின்றது. சொந்த பந்தங்கள் எல்லாம் சேர்ந்து சுற்றுலா செல்வதென்பது இந்த தலைமுறையில் சாத்தியமே இல்லை போலும்.


மேற்கண்ட படத்திலிருப்பது அதே உவரி ஆலயத்தின் அருகிலுள்ள மற்றுமொரு சர்ச். ஆன்ட்ரூ சர்ச் என்று கூகுள் சொல்கிறார். எனக்கு சரியாக நினைவில்லை. அந்தக் கோவிலிருந்து நடந்தே இங்கு சென்று விடலாம். இவ்வாறு நடந்து போகும் வேலையில் அங்கு வசிக்கும் மீனவ குடும்பங்களைப் பார்த்திருக்கிறேன். வலை பின்னிக்கொண்டும், கூட்டமாக சீட்டாடிக் கொண்டும் இருப்பார்கள். இவர்கள் ஏனோ இன்றும் பசுமையாக என் நினைவில் இருக்கின்றார்கள். அதனாலயே 'கடல்புரத்தில்' நாவல் வாசிக்கும் போதும் சரி, இப்போது 'ஆழி சூழ் உலகு' நாவல் வாசித்துக் கொண்டிருக்கும் போதும் சரி ஏற்கனவே சொன்னது போல் உவரியை மனதில் கற்பனை செய்து கொள்கிறேன்.



சிறியவர்களாகிய எங்களுக்கு ஆன்ட்ரூ சர்ச் பிடிப்பதில்லை. சிறுவர்கள் நாலைந்து பேர் சேர்ந்து கொண்டு 'நாங்க ஏரோ ப்ளேன் சர்ச்சுக்கு போறோம்' என்று தனியாக கழண்டுவிடுவோம். ஒவ்வொரு முறை உவரி வரும் போதும் இந்தக் கோவிலுக்குச் செல்வது அலாதியான இன்பம்.


இன்று காலை 'ஆழி சூழ் உலகு' நாவல் குறித்து சில பதிவுகளை வாசிக்கும் போது மயிர் கூச்செறியச் செய்யும் தகவல் ஒன்று  கிடைத்தது. ஆழி சூழ் உலகு நாவலில் ஆமந்துறை என்னும் ஊர் கதைக் களமாக வருகிறது என்று சொன்னேன் அல்லவா? ஆமந்துறை என்பது ஒரு கற்பனைப் பெயராம். உண்மையான பெயர் உவரியாம்.

- த.ராஜன்