சமீபத்திய பதிவுகள்

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

2 November 2016

ஸீரோ டிகிரி – நான் லீனியர் இயற்றலின் பெரு வெள்ளம்

விரிந்து நிற்கும் நாவல் 'சாரு நிவேதிதா எழுதிய ' ஸீரோ டிகிரி. மனிதச் சிந்தனையின் இயல்பு மையப்புள்ளியைத் தேடி நிறுவி அதைக்கொண்டே படிப்பினையும் பெறுவனவும் நிகழ்த்துவது. பொதுவாகவே நவீன இலக்கியம் என்பது வலுவான மையக்கரு கொண்டதாக இருக்கும். அக்கருவை ஆக்கப்பூர்வமாகவும் தர்க்கப்பூர்வமாகவும் நிறுவ முயலும். இவ்வடிவத்தின் ஆக்கங்கள் தெளிவான செறிவான ஒருங்கிணைவுள்ள வடிவம் கொண்டதாக இருந்திருக்கிறது. அதைத் தகர்த்து, எழுத்து என்னும் வெளியில் மனித எல்லையின் அறிதலுக்கு உட்பட்ட சகல உணர்வுகளையும் மையப்புள்ளியில் சாரச்செய்யாது de-centralization  நிகழ்த்தி விரிந்து நிற்கும் நாவல் ஸீரோ டிகிரி.
இலக்கியம் ஏழை மக்களில் இருந்து உருவாக வேண்டும் - கல் உடைப்பவர்கள் பாலியல் தொழிலாளிகள் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டவர்கள் அதில் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோரிடையே இருந்து வரவேண்டும். சாதாரணத் தொழிலாளிகள் பற்றி எழுதினால் அது முற்போக்கு யதார்த்தவாதம் மட்டுமே என்ற கருத்தை சாரு நெடுநாளாக வலியுறுத்திக் கொண்டிருக்கிறார். அவற்றை சுயசரிதைத் தன்மையோடு கையாளவும் செய்கிறார். நாவல் முன்னுரையில்இதை பங்களிப்பென ஏற்பதோசுற்றுப்புறச் சூழலை மாசுபடுத்தும் கழிவுப்பொருளாக ஒதுக்கித்தள்ளுவதோ சமூகத்தின் பிரச்சனையே தவிர என்னுடையது அல்லஎன்கிறார் சாரு நிவேதிதா. அதுவே உண்மையும் கூட.
*
இந்த நாவலின் புரிதல் அல்லது விமர்சனம் இரண்டே வகைமையில் அடங்கிவிடுகிறது. இது கொண்டாடப்படுகிறது அல்லது தூக்கி எறியப்படுகிறது. ‘மண்டை காயறது மண்டை காயறதுன்னு கேள்விப்பட்டிருக்கேன் ஆனா அது என்னனு இதப்படிக்கறப்பதான் தெரிஞ்சது எனவும் என் வாழ்க்கையில மிக முக்கியமான நாவல் இது ஷா. அற்புதமானது மிஸ் பண்ணாதீங்க என்று சொன்னவர்களையும் சந்தித்திருக்கிறேன். இந்தப் பிரிவினைக்கு காரணி மையத்தைக் கண்டடைதல் என்று எண்ணுகிறேன். மையம் தேடித் தோற்றவர்கள் பெரும்பாலும் இந்நாவலைக் கைவிட்டுவிட்டு தூக்கி எறிபவர்களின் பக்கம் சேர்ந்துகொள்கிறார்கள் அல்லது புரிந்துகொள்ள மறுக்கிறார்கள். நாவலில் இவ்வாறு வருகிறது: “என் வாழ்வைப் புரிந்து கொள்ள வேண்டுமானால், என் எழுத்தைப் பார்க்காதே. என் எழுத்தைப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால், என் வாழ்க்கையைப் பார்க்காதே. என் எழுத்து வேறு. என் வாழ்க்கை வேறு.”
படைப்பு எப்படி உருவாகிறது அதன் மூலம் படைப்பாளி எவ்வாறு உருவாகிறார் என்பதை அவருடைய ஆழ்மனச் சிந்தனையோட்டத்தின் வெளிப்பாடாக வாசிக்க முயல்வதின் மூலமாகத்தான் முடியும். சாரு நிவேதிதாவின் நாவலில், ஆழ்மனச் சலனங்கள் முகமூடி ஏதுமின்றி எழுத்து வடிவம் கொள்வதால் படைப்பாளியாக அவரை அறிந்து கொள்ள முடிவது அவ்வளவு சிக்கல் இல்லை. அவ்வெழுத்தின் நேரடித் தன்மையும் நிர்வாணமும் பெரும்பான்மையோருக்கு அதிர்ச்சி தரும் என்பதில் ஆச்சரியமில்லை
*
நாவல் எனப்படுவது வடிவம் சார்ந்தோ அளவு சார்ந்தோ அல்ல என்பது என் கருத்து. அது கதாபாத்திரங்களின் உருவாக்கங்களிலும் அதன் இயல்பின் படைத்தலிலும் ஒளிந்திருப்பதாக கருதுகிறேன். அந்த வகையில் இந்த நாவலின் கதாபாத்திரங்கள் தோன்றுவதும் அழிவதுமாய் இருக்கின்றன. எழுத்தில் எழுத்தாளனின் மரணம் என்பது பின் நவீனத்துவத்தின் முக்கியமான கோட்பாடு என்று சொல்லப்படுகிறது. அவற்றில் எனக்கு உடன்பாடு இல்லை. எந்த ஒரு பாத்திரத்தை எடுத்து அதைத்தொடர்ந்து பயணிக்க நினைத்தால் அது ஏதோ இடத்தில் காணாமல் போகிறது அல்லது அழிந்து போய்விடுகிறது. எனவேதான் வடிவமின்றி நிற்கும் இந்த நாவலை எந்த இடத்திலிருந்தும் எந்த அத்தியாயத்திலிருந்தும் தொடங்கி வாசிக்க முடிகிறது.
பல்வேறு வடிவங்களுக்கும் எழுத்து முறைமைகளுக்கும் மத்தியில் நான்-லீனியர் எழுத்துமுறை மிகமுக்கியமானது. இதனை சாரு கையாளும் விதம் ருசிகரமானது. கருவின் மையக்கோட்டினை அழித்து அதனை பெருநீள்வட்டத்திலிருந்து உதிரும் சிறு பிரிவுகளாக்கி கோர்க்கிறார். அத்தியாயங்கள் கலைந்துவிட்டதாகவும் எதிர்காலம் முன்னுக்கும் இறந்தகாலம் பின்னுக்கும் தள்ளப்பட்டிருப்பதாகவும் இந்த காலக் குழப்பத்தில் கடந்த காலம் அழிந்து அழிந்து பூஜ்ய கணத்திற்கு (ஸீரோ டிகிரிக்கு) எழுத்துக்கள் திரும்பிவிடுவதாகவும் நியாயப்படுத்துகிறார்.
ஆங்கில மொழிபெயர்ப்பில் அல்லாது தமிழில் மட்டும் இது லிப்போகிரம்மாடிக் நாவல். சர்வதேச அளவிலேயெ ஒன்றிரண்டு நாவல்கள் மட்டுமே இந்த முறையில் எழுதப்பட்டிருக்கிறது என்கிறார் சாரு. இந்நாவலில் ஒரே ஒரு அத்தியாத்தைத் தவிர வேறெங்கும் ஒரு மற்றும் ஒன்று வார்த்தைகளும் கமா கேள்விக்குறி போன்ற நிறுத்தற்குறிகளும் இடம்பெறவில்லை – இந்தக் கட்டுரையைப்போல!
*
நான் என்ற நான் என்பது சாருவா மிஸ்ராவோ சூர்யாவோ முனியாண்டியோ என யாராகவேண்டுமானாலும் இருக்கலாம் எனத்தொடங்கும் இந்த நாவல் அல்லது நாவலுக்கான குறிப்புகளில் சாருவின் சுயசரிதத்தன்மை தெரிவதை தவிர்க்கமுடியவில்லை. பல பெயர்களையும் மூலப்பெயருக்கு நெருக்கமாக அமைத்து கிசுகிசுத்தன்மையை உருவாக்குவது அவரது வழக்கம். உதாரணமாக: முனியாண்டியின் எழுத்தை மலம் என்று சொன்னவர்களுக்கு அவன் சொல்லும் எதிர்வினைகளும் எதிர்க்கொள்ளும் விதத்தின் விளக்கங்களும் முதலானவை. சொல்வது யார் சொல்லப்படுவது யார் என்பவை தெளிவாக இருக்கும் இவ்விடங்கள் எதற்கு சொல்லப்படுகின்றன என்ற கேள்விக்கு பதில் தருவதில்லை. இரண்டாவதாக கிபி ஒன்பதாம் நூற்றாண்டுச் செத்த மூளையின் மற்றும் உத்தமத் தமிழ் எழுத்தாளனின் விமர்சனங்களும் அதற்கான எதிர்வினைகளும் அடக்கம்
இந்த நாவலில் ஓரிடத்தில் வருகிறது; ‘உண்மையில் பார்த்தால், எந்த சமூக மதிப்பீடுகளை அவன் மறுக்கிறானோ அதே சமூக மதிபீடுகளைத்தான் அவன் ஏற்று வாழ்ந்து கொண்டிருக்கிறான். சமூக மதிப்பீடுகளை மறுப்பதை காண்பித்துக் கொள்வதின் மூலம் அவன் தன இருப்பை ஸ்தாபிக்க முயல்கிறான். ஆனால், சமூக மதிப்பீடுகளை ஏற்பதோ, மறுப்பதோ எல்லாம் அவற்றைப் பிரதானப்படுத்தத் தானே செய்கிறது. அவன் பேசும் எதிர்க்கலாச்சாரத்தையும், கலாச்சாரம் உபகலாச்சாரமாக உள்வாங்கிக் கொண்டு விடுகிறது.’
ஜெனிக்கு எழுதப்படும் கடிதத்தில் ருவாந்தாவில் தற்கொலை செய்து கொண்டதாக சொல்லப்படும் முனியாண்டி தில்லியில் இறந்த மிஸ்ரா ஆகியோர் சூர்யாவுடன் தென்படுகிறார்கள். இந்த சுவாரஸ்யங்களுக்கு மத்தியில் - சில பகுதிகள்  வெளியே துருத்திக்கொண்டு நிற்கிறது. அதில் முக்கியமாக பெரும் பரபரப்பாக சித்தரிக்கப்பட்ட பெண்கள் மற்றும் அவர்களது காமத்து சிந்தனைகள் பற்றி   எழுதியிருக்கப்படும் பகுதிகள் முதிர்ச்சியில்லாமல் இருக்கிறது. அந்த அத்தியாயங்களை விடலைத்தனமாக எழுதியுள்ளார் என்பதை மறுக்க முடிவதில்லை. வாசுகி என்பது யார் என்ற கேள்விக்கு விடைதான் முதல் அத்தியாயம். அதைத் தொடர்ந்து நக்கலும், பாலியல்திரிபுகளும், சிதறிய குறிப்புகள் போன்ற வடிவமும் கொண்டது இக்கரு.
மையத்தில் இருந்து விலகி சிதறி நிற்கும் இருக்கும் எல்லா அத்தியாயங்களையும் தாண்டி கார்மீனியர் கஸர்மீனியர் கலவரங்களும் திருத்தப்பட்ட பதிப்பில் காணாமல் போன ஈழ வார்த்தைகளும் அகதி முகாம் குறிப்புகளும் முனியாண்டியால் நிகழும் ஜாதிக்கலவரமும் ஜலஜாஸ்ரீ நடிகையின் பன்றி வளர்ப்பும் எழுத்துக்குள் சிக்கிக்கொண்டு மீள முடியாமல் தவிக்கும் எழுத்தாளனும் பாலியல் வன்மைகளும் அது குறித்த அகழ்வாராய்ச்சி போன்ற கேள்வி பதில்களும் தாயுமானவனின் உடல் மற்றும் உளவியல் டார்ச்சர்களும் கம்யூனிச பேச்சுக்களும் எழுத்தாளனின் (கதையில்) நிகழ்காலத்தைச் சொல்லிச்செல்லும் குறிப்பேடுகள். இவற்றில் சாரு நுண்மைகளைத் தொடவில்லை என்பது என் கருத்து. ஆழமோ அழுத்தமோ அன்றி மாற்றாக பெருவெட்டாய் சொல்லப்பட்ட விஷயங்களின் நேரடி வன்முறையும் காமச் சித்தரிப்புகளும் மிகையுணர்ச்சிகளுமே எஞ்சுகிறது. இந்தப் புள்ளியில் பாலியல் நாவல் எழுதப்படும் அத்தியாயங்கள் பல சந்தேகங்களைக் கிளப்புவதை தவிர்க்க முடிவதில்லை. காதல் இல்லை காமம் கொஞ்சம் துருத்திக்கொண்டு நிற்கிறது.
*
ஏன் நான்-லீனியர் என்ற கேள்வி மிக முக்கியமானது. அதைப் புரிவதே நோக்கம். மனிதனின் தர்க்கம் அதிகாரங்களை உருவாக்கும் தன்மை கொண்டது. இந்த அதிகாரங்களின் கூர்நகத்தினால் நம்மைச் சுற்றிலும் உருவாக்கப்படும் தர்க்க ஒழுங்குகளைக் கவனித்து அவற்றிலிருந்து அவற்றின் வன்மப் பிடியிலிருந்து விடுபடக்கூடிய விஷயங்களில் கவனம் செலுத்துவது மிக இயல்பு மிக அவசியமும் கூட. இவ்வகை அதிகாரங்களைச் செலுத்தும் வழிகள் சார்ந்து வன்முறை உருவாகிறது. அதன் வெளிவிளிம்புகளை எப்போதும் முக்கியக் கருவியாகவே கருதவேண்டும். அவற்றிலிருந்து விடுபடும் விஷயங்கள், மறைக்கப்படும் விஷயங்கள், தோற்கடிக்கப்பட்ட விஷயங்கள் முக்கியமானவை. இவ்வகை அதிகாரம் வெடித்துச் சிதறும் இடங்களில் ஏற்படும் வன்முறை காமத்திலும் உளவியல் சிதையிலும் பெண்ணடிமைத்தனத்திலும் படர்ந்து நிற்கிறது.
அவ்வகையில் ஆண் என்ற அதிகாரத்தின் பிடியில் சிக்கி சிதைந்த பெண்களாக நாவலின் பிற்பகுதியின் (கடந்த காலத்தின்) முக்கிய பாத்திரங்களான ஆர்த்தி மற்றும் அவந்திகா. சூர்யா – நளினி தாம்பத்ய வாழ்வியல் துயரங்களுக்குப் பின் அவந்திகவைச் சந்திக்கிறான். அவளுக்கு நிகழ்ந்த வலிகளை அறிகிறான். சூர்யாவுக்கும் இந்த வலி ஆர்த்தி மூலமாக தெரியும். இவ்வலிகளிருந்து ஒளிந்துகொள்ள முற்பட்டும் தனது மீதி வாழ்வினை தனது குட்டி இளவரசி ஜெனீ என்னும் ஜெனிஸிஸ்க்கும் அர்ப்பணித்து சரணடைந்து இந்த இறந்த காலத்தை அழிக்க முற்பட்டு அதனிடமிருந்து அதன் கோரப்பிடியிடியிலிருந்து ஒளிந்துகொள்ளவே – எழுதி அதை அழித்து திரும்ப எழுதி அதையும் அழித்து போதாமையால் எழுதும் எழுத்தாளனின் மரணத்தை சித்தரித்து கடந்த காலத்தை அழித்துவிடவே – காலக் குழப்பத்தை உண்டாக்கி அதைப் பூஜ்ய கணத்தில் நிறுவுகிறார் சாரு. இதன் மூலம் கடந்த காலம் முழுவதுமாக சுயமிழந்து அழிந்து நிற்கிறது. அதற்குத்தான் இந்த நான் லீனியர் யுக்தி. எழுத்தை எழுத்தால் எழுதுகிறது எழுத்து  என்று எழுத்தின் பின்னால் தன்  நாவலின் பின்னால் ஒளிந்துகொண்டு தனக்கும் தான் சார்ந்தவர்களுக்கும் நிகழ்ந்தவைகளை கடந்த காலத்தை அழிக்க முற்படுதலின் சாரமே இந்த நான்-லீனியர் வடிவம் என்பது என் துணிபு. இந்த நாவலின் மிகமுக்கியமான பாத்திரமாக மாறியிருக்கிறது இந்த வடிவம்.
*
தர்க்கம் சார்ந்து சூழல் சார்ந்து உருவாகும் எளிய கருத்துக்கள் சாதாரணமான பார்வைகள் நாவலுக்குரியவை அல்ல. இவை சார்ந்து உருவாகும் கருத்தை முன்வைக்கும் அத்தியாயங்களை எழுதுவதே மோசமான கண்ணோட்டத்தை உருவாக்குகிறது. தனது கருத்தை அல்லது நோக்கை ஒட்டுமொத்த நோக்காக மாற்றும் பொருட்டே வாழ்க்கையை எவ்வளவு முடியுமோ அவ்வளவு அதிகமாக அள்ள முயல்கிறது ஸீரோ டிகிரி. இந்த தேவையை ஒட்டியே நாவலின் வடிவம் அமைந்திருக்கிறது. மையக் கதாபாத்திரம் மட்டுமே உணர்ச்சிகரமாகச் செயல்படுவதையும் பிற கதாபாத்திரங்களின் குரல் அந்த ஆளுமை முன் மங்குவதையும் தவிர்த்து நேர்கோடான காலத்தால் மிகுந்த ஆயாசத்தை ஏற்படுத்தும் கதை ஓட்டத்துக்காகவும் தொடர்ச்சியை நிலைநாட்டும் பொருட்டும், அவ்வளவாக ஆழமும் நுட்பமும் இல்லாத விஷயங்களைச் சொல்வதிலிருந்து சாரு பின்னைடையவில்லை
நாவலை வரையறைசெய்ய இன்று சாத்தியமான ஒரே அளவுகோல் வாசகத் தரப்பு மட்டுமே. நவீன காலகட்டத்தில் நாவல் என்ற வடிவம் எதையெல்லாம் அடைந்துள்ளது அவ்வடிவில் என்னென்ன சாத்தியங்கள் உள்ளது என்ற அளவில் வாசகனின் எதிர்பார்ப்பையே நாவலின் வடிவமாக முன்வைக்கலாம். இந்த  வடிவத்தின் பரிணாமம் என்பது அந்த நோக்கத்தை மேலும் மேலும் சிறப்பாக நிறைவேற்றும்போதே நிறைவு ஏற்படுகிறது. அதற்கான தேடல் போதையைப் போன்றது. கைநடுங்க ஆரம்பிக்கும் குடிகாரர்களின் நிலைக்கும் அதற்கும் வேறுபாடில்லை. நாவல் அதன் ஒருமையுடன் எழுந்துவிடும்போது நமக்குள் இருந்தும் எழுகின்றன. அதன்பின் அவையே நம்மைப் பாதையில் இட்டுச்செல்கின்றன. வேறெதையும் நினைக்க விடுவதில்லை. அவை ஆடிமுடித்து இறங்குவது வரை அதற்கு நம்மைக் கொடுத்துவிட்டால் மட்டும் போதும். ஸீரோ டிகிரிக்கும் அதே! ஆனால் இது நீள்வட்டத்தைப்போல ஆரம்பமும் முடிவும் இல்லாமல் மீட்சியின்றி ஏதோ ஒரு வெளியில் சுழன்றுகொண்டிருக்கும் பிரதி பிம்பம்! தர்க்க எல்லைகளுக்கு அப்பாற்பட்ட சிந்தனைக் கூறுகளை உள்ளடக்கிய இதனை ஏற்கலாம் அல்லது மறுக்கலாம். கொண்டாடலாம் அல்லது காலில் போட்டு மிதிக்கலாம். நிராகரிக்க மட்டும் முடியவே முடியாது!
-    ஷா

23 August 2016

[பயணம்] தொடக்கத்தின் முடிவுரைகள்

இன்று…

”என்ன சொல்லி என்ன சார். அடுத்த வருசம் இந்நேரம் வந்தீங்கண்ணாக்க இங்க இந்த வேனு த்ரில்லுன்னு ஒன்னுமே இருக்காது நாங்க கூட இருக்கமாட்டோம்” என்று அவர் சொன்னது உண்மையாகிவிட்டிருந்தது.

ஒரு நெடும்பயணம். நெடுநாளாக எழுதவேண்டும் என நினைத்த பயணம். டிசம்பர் 30, 2015-ல் இருந்து ஜனவரி 2, 2016 வரை, கோவையிலிருந்து புறப்பட்டு நாகப்பட்டினம், நாகூர், காரைக்கால், வேளாங்கண்ணி சுற்றி பின்னர் ராமநாதபுரம், ஏர்வாடி, ராமேஸ்வரம், தனுஷ்கோடி பார்த்து பின் கன்னியாகுமரி நாகர்கோவில் முடித்து திருநெல்வேலி மதுரை திருப்பூர் வழியாக கோபிச்செட்டிப்பாளையம் வர ஆயிரத்து நானூறு கிலோமீட்டர். பஸ் பயணம்.
தனியாக!

நான் சென்று வந்த பாதை:



சுற்றித் திரிந்த இடங்கள்:

நாகூர், காரைக்கால், வேளாங்கண்ணி, ஏர்வாடி, தனுஷ்கோடி, கன்னியாகுமரி, நாகர்கோவில், திருநெல்வேலி, மதுரை.

மேற்சொன்னதல்லாத, குறைந்தபட்சம் ஒரு மணி நேரத்துக்கும் மேல் இருந்த ஊர்கள்:
திருச்சி, நாகப்பட்டிணம், பட்டுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருப்பூர்.

பார்த்த நதிகள்:
காவேரி, வைகை, தாமிரபரணி

சந்தித்த கடல்கள்:
வங்காள விரிகுடா, இந்தியப் பெருங்கடல், அரேபியக் கடல்

பயணத்தின் போது எழுதிய டைரிக் குறிப்புகள் இனி..

டிசம்பர் 30, 2015, இரவு, 20:48 மணி கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையம்.

என்ன எண்ணத்தில் இப்பயணத்தை ஆரம்பிக்கிறேன் என்று தெரியவில்லை. வருடத்திற்கு ஒருமுறையேனும் சென்றுவிடும் இரு பெரிய தர்ஹாக்கள், இரண்டு பெரிய கடல் சங்கமங்கள், அறியாத ஊரில் அன்னியமாய்த்திரிதல் எனத் திட்டமிட்டு புறப்பட்டிருக்கிறேன். பேருந்து புறப்பட இன்னும் கால் மணி நேரம் இருக்கிறது. நாகப்பட்டிணம் நோக்கி தனியாக பைக்கில் பயணிக்கவேண்டுமென்ற ஆசை இருக்கிறது. முதற்கட்டமாக பேருந்தில் கிளம்புகிறேன். அதற்கு புல்லட் வேண்டும். எனது யுனிகார்ன் சென்னையிலிருந்து கோபி வருவதற்கே அழுதுவிட்டது. புல்லட்டில் குழுவாக பயணிப்பவர்கள் எனது பொறாமைக்குள்ளானவர்கள். புல்லட் பொறுமையாக வாங்கிக்கொள்ளலாம். இப்போதைக்கு பேருந்து! இடையிடையே நேரம் கிடைக்கும்போது நேரடியாக எழுதும் எண்ணத்தில் இதை இப்போது எழுதி வைத்துக்கொள்கிறேன். இப்பயணத்தின் நோக்கம், ஊர் சுற்றலோ தேடலோ குறிப்புகளுக்காகவோ அல்ல. அப்படியாக இருக்கும்பட்சத்தில் அதைவிட சுயநலம் வேறு இருக்கமுடியாது. பயணத்தின் நோக்கம் பயணித்தலே.

டிசம்பர் 31, 2015 இரவு 02:14 திருச்சி மத்திய பேருந்து நிலையம்.

திருச்சி - மிகவும் பழக்கப்பட்ட ஊர். இங்கு இரவும் பகலாகவே இருக்கிறது. கிட்டத்தட்ட மதுரைக்கு நிகரான இரவினைக் கொண்டிருக்கிறது. இது சமீபத்தில்தான் நிகழ்ந்திருக்க வேண்டும். சென்ற முறை வந்தபோது இப்படியிருக்கவில்லை. நான்கரை மணி நேரம் பயணித்திருக்கிறேன். விழித்தே இருந்தேன். ஜே ஜே சில குறிப்புகளில் சில அத்தியாயங்களும் இசையும் துணை. இரவு என்பது தனி போதை. இது பேரின்பத்தின் ஒளிவடிவம். இனி நாகப்பட்டிணத்தில் விடியும். மிக நெருங்கிய நண்ப நண்பிகளுக்கு ஏன் தனிமைப்பயணம் என்று விளக்கமுடியாமல் போனது இப்போது சரியெனப்படுகிறது. இந்த நொடியில் இந்த இரவின் நீட்சியில் ஏதோ ஒரு ஊரின் வழியே செல்லும் நான் எனது ஒழுங்கற்ற வரிசையில் அமரிந்திருக்கும் எண்ணச் சித்திரங்கள் ஒரு நூலினை ஏந்தி தாமாக வந்து வரிசையில் அமர்வதைக் காண முடிகிறது. இந்த நெடும் பயணத்தினூடே நான் கடக்கும் மனிதர்கள்தான் இச்சமூகத்தின் பிரதிபலிப்பு. அவர்களுடனான உரையாடல் எனக்கான படிப்பினைகள், இந்நிகழ்வுகளே எனது வரலாறு. இந்நிகழ்த்தலில் ஆக்கம் பிறக்கிறது. அந்த ஆக்கத்துக்காகவே இப்பயணம். இதைச்சொன்னால் ”அரைக்கிறுக்கன்” எனச்சொல்வார்கள். எனினும் இதனை மனதிற்கினிய நினைவுகளாக்குகிறது காலம். இந்த போதைக்கு எழுத்து வடிவம் மட்டுமே தர வேண்டும். அது ஒன்றே என் வேலை.

டிசம்பர் 31, 2015, காலை 8.34, நாகூர் கடற்கரை

இந்த இளவெயிலில் கடற்கரைக்கு நான் மட்டுமே வந்திருக்கக்கூடும் என்று நினைத்திருந்தேன். இங்கே ஈரக்கூந்தல் மற்றும் உடல் வடிவினை ஒட்டிய ஈர ஆடைகளுடனும் இளம் பெண்கள் கடலாடிக்கொண்டும் நடமாடிக்கொண்டும் இருக்கிறார்கள். ஆண்களும் அப்படித்தான் இருக்கிறார்கள். ஆண்களைப்பற்றிய பேச்சு எனக்கெதற்கு. அமைதியாக ரசிக்கலாம். அவ்வளவே.

காலை 9.15, அதே இடம்.

தூரத்தில் மிகப்பெரிய கப்பலொன்று மிதக்கிறது. அதைச் சுற்றி சில குட்டிப்படகுகள். கரையில் அவை மூன்று நான்கு யானையளவு இருக்கும். தூரத்தால் துளியாய்த் தெரிகிறது இடதுபக்கம் காரைக்கால் படகுத்துறை வாசல். அழகான அமைதியான கடல். இப்போதைக்கு வேறொன்றும் தேவையில்லை என்கிறது மனம். எழ மனமில்லாத சூழல். மிதமான வெயில். கடந்த ஏழெட்டு ஆண்டுகளாக வருடம் ஒருமுறையேனும் நிச்சயம் வரும் இடம். அப்போதும் இதே கடல் ஆனால் நான் அதே நான் இல்லை. அதுதான் இந்நிகழ்வின் சாராம்சம். விடிந்ததும் திறக்கப்பட்ட தர்ஹா நடையை சாத்தும் முன்பே வழிபாடெல்லாம் முடித்துவிட்டேன். இனி கடல் மட்டுமே மிச்சம். இங்கே ஒரு பெண். புது மனைவியாக இருக்கக்கூடும். அழகாக ஓடியாடிக்கொண்டிருக்கிறார். பின்னே ரயிலோசை. அந்த ரயில்ப்பாதையைக் கடந்து தான் கடலுக்கு வரவேண்டும். 2004 ஆழியலையில் தர்ஹாவுக்குள் வெள்ளம் புகாமலிருக்க உதவியது இங்கு நின்றிருந்த ரயில் தானாம். இந்தச் சாலையும் கடலும் என்னை மூழ்கடித்துக் கொண்டிருக்கின்றன. மீண்டுவந்தால் எழுதலாம். மன நிகழ்வின் உன்னத தருணத்தில் டைரியும் தேவையில்லை எழுத்தும் தேவையில்லை. நான் மட்டும் போதும்.

டிசம்பர் 31, காலை 11.55, வேளாங்கண்ணி மாதா தேவாலயம் வாசல்.

காரைக்காலுக்கு எதற்கு போனேன் என்று தெரியவில்லை. நாகூரிலிருந்து பத்தே நிமிடம் தான். எங்கு போவது என்ன செய்வது என்றறியாமல் பேருந்து நிலையத்தைச் சுற்றியிருந்த பஜாரில் ஒரு சுற்று. அதுவும் தமிழ்நாடு போலத்தான். வித்தியாசம் - இங்கு டாஸ்மாக் அங்கே ஒயின்ஸ் மற்றும் அதன் விலை. எங்கு போவதென அறியாமல் சுற்றிவிட்டு பழக்கப்பட்ட இடமான வேளாங்கண்ணி மாதா கோவிலுக்கு வந்திருக்கிறேன். இது நான்காவது முறை. மிகக் கூட்டமான இடம். ஆனாலும் ஆலயத்துக்குள்ளான அமைதி அலாதியானது. இங்கிருக்கும் கடற்கரையில் உட்கார இடமே இல்லை. விடிந்தால் புத்தாண்டு சிறப்பு வழிபாடு உள்ளதால் கூட்டம் வெகுவாய் உள்ளது. அழகாய் இருக்கிறது. இப்பயணத்தில் ஒரு புகைப்படம் கூட எடுக்கக்கூடாது என்றிருந்த நிலைப்பாட்டை இக்கோவிலின் அழகியல் சாய்த்துவிட்டது.



ஜனவரி 1, 2016, நள்ளிரவு 12.23 மணி, ஏர்வாடி

ஏர்வாடிக்கு நான் போகிறேன் என்றாலே என்ன மச்சி ட்ரீட்மெண்ட்டா என்பார்கள். அதனால் நான் இங்கு வருவதைப் பற்றி யாரிடமுமே சொல்லவில்லை. புத்தாண்டுக்கு வாழ்த்திய அண்ணன் கூட ஒக்காந்திருக்கியா இல்ல ஆடிக்கிட்டிருக்கியா என்றான். இங்கே வியாழன் இரவு மனநோயாளிகள், பில்லி சூனிய ஏவல் பாதிப்பானவர்கள் மற்றும் பேய் பிடித்ததாகச் சொல்லப்படுபவர்கள் உக்கிரமாக உச்சம் பெற்று ஆடிக்கொண்டிருப்பார்கள். எங்கே நானும் ஆடிவிடுவேனோ என்று பயம் வேறு. தனியாக வேறு வந்திருக்கிறேன். பயந்து வெளியே வந்துவிட்டேன்.

இன்று புது ஆண்டு பிறந்திருக்கிறது. இசை லயிப்பில் நகர்வுகள் தர்ஹாவில் குலுங்கி குலுங்கிச் சிரித்துக் கொண்டிருந்த மலையாளப் பெண் பெட்ரோல் வாசனை காலியான ரோடு வெடித்து சிதறிய பட்டாசுகள் அதற்குப்பின் நிசப்தத்தின் எதிரொலி நட்பாராயும் பூனைக்குட்டி சில்லறைகளை எண்ணிக்கொண்டிருக்கும் கண்டக்டர் சம்மனங்கால் போட்ட கிழவி அணையாத தெருவிளக்கு மேஜையின் மீதிருந்த காய்ந்த பூ ஒடுங்கிப்போன சிகரெட் டப்பா மங்கிய கண்ணாடி பாத்ரூமின் மஞ்சள் விளக்கு பைத்தியக்காரியின் கிழிந்த சட்டை தீ மிதிக்கும் நண்பன் வேப்பமர நிழல் வாய்க்காலில் குளித்த பெண்ணின் ஈரப்பாவாடை கடைசி பீடியை வலிக்கும் கிழவன் ஒற்றை மரம் மொட்டை மாடி அகல்விளக்கு என எல்லாம் கடந்தும் கூடவே வந்துகொண்டிருக்கிறது நீல நிற மேகங்களும் அதன் அலைகளும். பயணம் தொடரும்.

ஜனவரி 1, 2016 இரவு 20:10

இதயத்துடிப்பு வெகுவாக உள்ளது. கைகள் நடுங்குகின்றன. இப்போதைக்கு எதுவும் எழுத முடியாது. இடம் தனுஷ்கோடி. கடைசியாக எனது ஃபோனில் டவர் இருந்த இடம்.

ஜனவரி 2, காலை 5. 51 கன்னியாகுமரி முக்கூடற்சங்கமம்.

அழகான காலைப்பொழுது. சூரிய உதயம். பேரின்பத்தின் இருப்பிடம்.




காலை 10.25, நாகர்கோவில் பேருந்து நிலையம்.

இன்றுதான் முதல் முதலாக நான் சூரிய உதயத்தைப் பார்த்தேன். நெடுங்கடலில் நீண்டிருக்கும் வெளியின் இருள் மெல்ல விலகிச்செல்லும்போது எதிரே வீற்றிருந்த திருவள்ளுவரின் கம்பீரம் வெளித்தோன்ற ஆரம்பித்தது. உடலை மட்டும் விட்டுவைத்து மனதையும் எண்ணத்தையும் இழுத்துச்சென்றுகொண்டிருந்த காற்றின் லயிப்பில் நீல வண்ணம் பூசிய வானும் வெண்மை படர்ந்த கடலும் இதயத்தின் கதவை உடைத்த நொடியில், இளமஞ்சள் நிறத்துப் புடவையை கீழ்வானமும் கடலும் உடுத்திக்கொண்டு தன்னுள் ஒளித்து வைத்திருந்த உருண்டையான பந்து ஒன்றை மெல்ல வெளிக்காண்பித்தது. அப்பந்து அழகாக எட்டிப்பார்த்தது. ஒரிரு கணத்தில் முழுவதுமாய் வெளிவந்த வானேறிய அந்தப்பந்திற்கு சூரியன் என்று பெயர். இதற்கு முன் சூரியனை இவ்வளவு அழகாகப் பார்த்ததில்லை. கடலையும் கூட.

நாகர்கோவில் பாஷை என்பது எனக்கு மிக மிக நெருக்கமானது. அலாதியானதும் கூட. ஜெமோ வழியிலும் இன்னும் சில நெருக்கத்தாலும் உண்டான இக்காதலை அடிக்கடி நாகர்கோவில் நண்பர்கள் சஜன் சாமுவேல் மற்றும் டான் குட்டி அவர்களை பேசச்சொல்லி மணிக்கணக்கில் கேட்டு சொக்கிக்கொண்டிருப்பேன். பாஷை கேட்க வேண்டியே சிலரிடம் வழி கேட்டேன். அவர்கள் பேச்சும் மரியாதையும் தன்னிகரற்றது. அழகுத்தமிழில் வழிமொழியும் நொடிகளைப்பற்றி சிரித்துக்கொண்டே எழுதிக்கொண்டிருக்கும் என்னைக் கண்டு கடந்து சென்ற கன்னியர்க்கூட்டம் சிரித்துக்கொண்டிருக்கலாம். அழகின் உச்சம் இப்பூமி!

ஜனவரி 2, 2016. மதுரை மாட்டுத்தாவணி. மாலை 4.10 மணி. சொந்த ஊரை நோக்கிப் புறப்பாடு.

திருநெல்வேலியில் இருட்டுக்கடைக்கெல்லாம் காத்திருக்க நேரமில்லை இருந்தாலும் அதே போல் அல்வா வாங்க பாரி சொன்ன அடையாளங்களைப் பின்பற்றிச்சென்றேன். அன்று பவர் ஹாலிடே என்றனர். ஏடிஎம் இல்லை. இருந்தாலும் அதில் காசு இல்லை. ஒரு ஆட்டோக்காரர் சார் எங்க என்றார். சொன்னேன். 

வழியில் ”இது தாமிரபரணியா” என்றேன். “ஆமா. கத்தி படம் பாத்துக்கியலா, விசய் நடிச்சது. அதுல கோலா கம்பேனி பத்தி சொல்லுவாவளே. அதுலுள்ளது இதுதான். பூரா தண்ணியவும் எடுத்துக்குறானுவள்வ. படம் பேரு தான் கத்தி அருவான்னு வெச்சிருக்கானுவ ஆன அதுலுள்ளது பூராவும் நல்ல கருத்து” என்றார். சிரித்தேன். நானூறு ரூபாய் ஆகும் அல்வா வாங்க. ஆட்டோவுக்கு மட்டுமே காசிருந்த நான் ஏடிஎம்மைத்தேடியலைவதை உண்ர்ந்த அவர், “இன்னிக்கு கரண்ட்டு இருக்காதே” என்ற பின் “எவ்வளவு அல்வா” என்றார். சொன்னேன். சட்டைப்பையில்ருந்து ஐநூறை நீட்டி வாங்கிக்கங்க என்றார். தர்ம சங்கடமாக இருந்தது. “இது ஒன்வே சார். போனாக்க திரும்ப வரமுடியாது. போயி வாங்கிக்கங்க. அங்கிட்டுப்பக்கம் ஏடிஎம்முல எடுத்தாக்க திருப்பி குடுங்க. இதுலென்ன இருக்கு” என்றார். அல்வா வாங்கி அரைமணிநேரம் சுற்றி ஏடிஎம்மில் பணம் எடுத்துக்கொடுத்து இறங்கும் போது பேசிய ஆட்டோக்கூலியில் ஒரு ரூபாய்கூட அதிகம் கேட்காத அவரிடம் “எந்த நம்பிக்கையில என்கிட்ட பணம் குடுத்தீங்க” என்றேன். “மனுஷன மனுஷன் நம்பலைன்னா எப்படி சார்” என்று சொல்வார் என நினைத்தேன். வாய்விட்டு சிரித்து “வுடுங்க சார்”. இவரைப் போன்றவர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள். மனிதனுக்கு மனிதன் செய்யும் உதவியால் இன்பம் நிறைந்திருக்கும் இவ்வுலகில் இன்னும் என் கண்ணில் படக் காத்திருப்பவை எவை எவையோ அவ்வனைத்தையும் காணக் கடவும் அருள்புரிவாராக. அவர் பெயர் மாணிக்கம். மறுபடியும் தின்னவ்வேலிக்கு வந்தாக் கூப்புடுங்க, ஊரச்சுத்திப்ப்பாக்க நெறய கெடக்குல்லா என்றார்.

வருவேன். வரவேண்டும். திருநெல்வேலியிலிருந்து மதுரை வரும் வழிநெடுக இதையே நினைத்துக்கொண்டிருந்தேன். நான் பார்க்க நல்லவனைப்போல் இருக்கிறேன் என்பதாலா? இல்லை அவரே அப்படித்தானா? என்னிடம் பணம் இருக்கும் என எதை வைத்து நம்பினார். உடைகளை வைத்தா? பேச்சை வைத்தா? முகத்தை வைத்தா? பாதி களைத்த முகத்தில் என்ன தெரிந்திருக்கும், எது எப்படியோ தமிழ்நாட்டில் ஒருவருக்கேனும் நான் நல்லவனாய் நாணயமானவாய் தெரிந்திருக்கிறேன். அதுவரை போதும்!

ஜனவரி 2, இரவு 11.10 மணி, கோபிச்செட்டிபாளையம். வீடு. இட்லி கோழிக்குழம்பு...

***************

இன்று…

ஜூலை 23, 2016. [எழுதப்படும் தேதி]

இடம் தனுஷ்கோடி.


வானுக்கும் பூமிக்கும் இடையில் இருக்கும் மிகச்சிறிய புள்ளிதான் மனிதன் என்பதை உணர்ந்தேன். 1964-ல் அழிந்து போன – “வாழத்தகுதியற்ற ஊர்” என அரசாங்கத்தால் கைவிடப்பட்ட தனுஷ்கோடி என்னும் மயானத்தை தரிசிக்க இப்போது இருக்கும் ஒரே வழி, கடல்வழிப்பாதை மட்டுமே. சாலை முடியும் இடத்திலிருந்து வேன் ஒன்று கடலுக்குள் போகும். மணல் மூடி அழிந்து போனதால் அரை கிலோமீட்டருக்கு முழங்கால் அளவு மட்டுமே தண்ணீர் இருக்குமாம். அதில்தான் இந்த வேன் போகும்.

வேனுக்குள்ளிருந்து நான் எடுத்தவை.




நின்றால் என் நெஞ்சு வரை மட்டுமே தண்ணீர் இருக்கும் இக்கடலின் சாராம்சமே அதன் வடிவம்தான். பாறைகள் இருக்கலாம். வேனை ஓட்டிச்செல்பவருக்கு எது எங்கே இருக்கும் என அத்துப்படி போலும். ராமேஸ்வரம் – தனுஷ்கோடி சாலை முடியும் இடத்தில் தொடங்கும் இந்த வேன் பயணம் கடலில் கரையில் எனக் கலந்து தனுஷ்கோடியை – தனுஷ்கோடி இருந்த இடத்தை – அடைய அரைமணி நேரமானது. எவ்வளவே கெஞ்சியும் “மணி அஞ்சுங்க. இதுக்கு மேல போனா இருட்டிடும்ங்க” என்ற அவர்களிடம் “வடநாட்ல இருந்து வந்திருக்காங்க. இதுக்காண்டி இன்னொரு தடவ வரமுடியுமாங்கறாங்க” என்று மொழிபெயர்த்தேன். உடன் மலையாளிக் குடும்பம் மற்றும் நான்.

தனுஷ்கோடியில் எடுத்தவை.


இது ரயில் நிலையத்தின் மிச்சமாக இருப்பது. இங்கெயே இருட்டிவிட்டதால் மேற்கொண்டு எதுவுமே எடுக்கவில்லை. நான் இறுதியாக நின்ற இடம் ராம சேது பாயிண்ட் எனப்படும் சங்கமம்.

இந்திய எல்லை என்றுகூட சொல்லலாம். அவ்விடத்தின் மையப்பகுதியில் நின்று கடலையே பார்த்துக்கொண்டிருந்தேன். இரவில் தலைமன்னார் கலங்கரை ஒளி தெரியும் கூட தெரியும் என்றார்கள். சுற்றிலும் கடல். என்னைத்தவிர வேறெதையும் உணரவில்லை. என் எண்ணச்சித்திரத்தில் கடலின் நிழல் படர்ந்திருக்கிறது. அதன் கிளைகள் எனது மூளை முழுவதுமாக பரப்பிக்கிடக்கிறது. இன்னும் அங்கே சில குடிசைகள் இருக்கத்தான் செய்கின்றன. ஓரிடத்தில் மட்டும் வேலியிருந்தது. அதனருகே சென்றபோது ஊர்க்காரரைப்போலிருந்தவர் ஒருவர் வேண்டாமென்றார். ஏனென்றால் புயலில் இறந்த ஆயிரக்கணக்கானோர் அடக்கம் செய்யப்பட்ட இடமாம் அது. புயலில் தப்பி நீந்திக்கரையேறிய நீச்சல் காளி என்பவருக்கு பேனர் வைத்திருந்தனர். அப்புயலிலும் வானொலியை இயக்கி செய்தி அனுப்பி பின்னர் அலையால் அடிக்கப்பட்டு பாலத்தில் தொங்கி பின் காப்பாற்றப்பட்டு ‘வீரத்திற்கு’ தேசிய விருது பெற்ற நால்வரின் கதையைச் சொல்லும் பேனரும் இருந்தது.



இதுக்குத்தான் சொன்னேன் வரமாட்டேன்னு என்று ட்ரைவர் சொன்னது நியாயம் தான். திரும்பும்போது முழுவதுமாய் இருட்டிவிட்டது. மேலே வானம் கீழே கடல் ஒரு திசையின் தூரத்தில் ராமேஸ்வரத்து விளக்குகள் இன்னொரு திசையில் யாதுமற்ற பெருவெளியைக் கொண்ட கடற்பரப்பு. வண்டியின் விளக்கு இரண்டடி தூரம் மட்டுமே காட்டியது ஒரு பெரிய டார்ச்சை என் கையில் கொடுத்தார் – நான் ட்ரைவர் சீட்டுக்குப் பக்கத்து சீட்டில் இருந்தேன் – குத்து மதிப்பாக கரையை நோக்கி அடிக்கச்சொன்னார். அடித்தேன். அதை வைத்து எவ்வளவு தூரம் கடலுக்குள் இருக்கிறோம் என்பதைக் கணக்கிட்டு வந்தார். எனக்கும் அவருக்கும் தவிர யாவருக்கும் தமிழ் தெரியாது. ”கரையிலபோனா வண்டிக்கு நல்லது கடல்ல போனா உங்களுக்கு நல்லது” என்றார். வண்டி நல்லாருந்தாத்தானே நாம போகமுடியும் என்றேன். வண்டி நின்னா என்ன சார் முட்டி அளவு தண்ணியில நடந்தே போயிடலாம் என்றார்.

அவர் மேலும் சொன்னவைகளின் தொகுப்பு:

“வெளியூராளுக்கு தண்ணிய நெனைச்சு பயம் உள்ளூரானுக்கு பேய நெனைச்சு பயம்”

“அடுத்த வருஷம் வந்திங்கன்னா இந்த வேன் எல்லாம் இருக்காதுங்க. சேது வரைக்குமே ரோடு போடுறானுங்க”

“இந்தக்கரையில தான் ஒரு பள்ளம் இருக்கு. போனா மாசம் இங்க ஒரு வேன் விழுந்துச்சு. அப்பறம் யாருக்கும் அடி படல. பகல்ன்னால சிரமமில்லாம எடுத்தாச்சு. இப்ப நைட்டு வேற”

“தாயி.. மேரி இந்த மேட்ட மட்டும் ஏறிட்டா போதும்”

”ஊராளுக எல்லாம் எங்கெங்கயோ போயிட்டாங்க. இங்க உள்ளவங்க மட்டும் இன்னும் மீன்பிடி வேன் தொழில்ன்னு இங்கயே இருக்கோம்.”

“போன வண்டியக்காணமேன்னு எவனாச்சும் வாரானா பாருங்க. சில்றக்….”

கரை ஏறும் வரை இரண்டு முறை குடைசாயப்பார்த்த வண்டியில் எனக்கு தோன்றியவை ஒன்றே ஒன்றுதான். மரணபயம். இதுவரை நான் சந்தித்திராத ஒன்று.

“இன்சூரன்ஸ் இருக்கு. கார்ட்க்கு இப்பதான் பணம் கட்டுனேன். கடன்னு பெருசா இல்ல. இருக்கற ஒன்னும் இன்சூர்ட் லோன் தான். டெத் சர்டிஃபிகட் காமிச்சா போதும். கல்யாணமும் ஆகல. செத்தா பிரச்சனையில்ல. ஆனா செத்துட்டேன்னு ஊருக்கு யாரு தகவல் சொல்லுவா? போனவன காணம்ன்னு தேடுவாங்களா? பாடி கரை ஒதுங்குமா? பாடி கெடைக்காம டெத் சர்டிஃபிகட் தருவாங்களா? வேன்ல இருந்து எறங்கிடவா? ஆழமா இருந்தா? நீந்தி கரைக்கு போவனா? நீச்சல் தெரியாது. உயிர் போற நேரத்துல தண்ணிய தப்பி தப்பி கரைக்கு வருவனா? கரை சேர்ந்து பேய் அடிச்சிருச்சுன்னா? அப்படியே கரைக்குபோனாலும் ஊருக்கு போக காசு? ஃபோன் பண்ணா யாரும் வருவாங்களா? நாளைக்கு காசு போடுவாங்களா? அப்படியே போட்டாலும் நைட்டு என்ன பண்றது? பொழைப்பனா? ஆண்டவன் விட்ட வழி.."

ஒரு மணிநேரத்துக்குப்பிறகு கரை ஏறினோம்.

வாழ்ந்தது போதும் சாகப்போகிறேன் என்ற பீதியில் எல்லாம் மறந்து நடுங்கிப்போன நிமிடங்களைக் கடந்து மீண்டு வந்த நொடிகள் இன்னும் நினைவில் இருக்கின்றன. இன்று மீண்டும் சென்றேன். இம்முறை பகலில்..! அன்று அவர் சொன்னதுபோல் வேன்கள் வெகு குறைவாகவே இருந்தன. சேதுவரை சென்ற ரோட்டில் கடைகளும் கடற்கரையில் குப்பைகளும் இருந்தன. அன்று இருந்த இயற்கை கொஞ்சம் கொஞ்சமாக கடலுக்குள் மூழ்கிக்கொண்டிருப்பதைக் காண முடிந்தது. தனுஷ்கோடி மீண்டும் அழியத்தொடங்கியிருக்கிறது.

- ஷா