முன்குறிப்பு:
இது ஒரு LIPOGRAMMATIC ARTICLE!
அதாவது சில வார்த்தைகளை அறவே தவிர்த்துவிட்டு அல்லது சில வார்த்தைகளை உபயோகிக்காமல் பதிவு எழுதும் முறை! இந்த பதிவில் 'ஒரு' என்ற வார்த்தையும் '!' (ஆச்சரியக்குறி)யும் உபயோகிக்கப்படவில்லை என்பது குறிப்படத்தக்கது!
இதுவும் ஒருவகையில் ஒரு சாதனையே!
கடவுள். ஒரு பிச்சைக்காரன் மற்றும் நான்:
பாரி என் நண்பனுக்கும் மேலானவன்.
அன்றுஎங்கள் நெருங்கிய நண்பனின் இல்லத்திருமண விழாவிற்கு காரைக்குடி செல்ல நேர்ந்தது.ஈரோட்டிலிருந்து திருச்சி வழியாக காரைக்குடி செல்ல திட்டம்.நண்பர்கள் கூட்டமாக வேனில் சென்று விட்டதால்,நானும் பாரியும் பேருந்தில் கிளம்பத்தயாரானோம்.
ஈரோடு.
பாரி எதார்த்தமாக பேசுவதிலும் சில உள்ளர்த்தம் இருக்கும். அப்படி பயணங்கள் பற்றி தொடங்கிய எங்கள் பேச்சு கடவுளிடம் வந்த போது திருச்சி நெருங்கியிருந்தது. தூக்க கலக்கத்தில் அங்கு பிச்சை எடுத்த சிறுமியிடம் பத்து ரூபாய் கொடுத்தான். ’இவர்களை பிச்சை எடுக்க வைத்து எவனோ பயன் அடைகிறான். இவர்களுக்கு எதற்கு பணம் தருகிறாய்” என்றேன்.
தானத்தைப் பற்றிய என் கருத்தும் இதுவே. இந்நிலையில் பாரி சில நாட்களுக்கு முன் படம்பார்த்துவிட்டு வீட்டருகே வரும்போது மின்னல் 120-130 கிமீ வேகத்தில் வந்த கார் அவனுக்குப்பிடித்த அந்த தெருவின் செல்ல நாயை இடித்துச் சென்றதாகச் சொன்னான். அங்கிருந்த பிச்சைக்காரன் அந்த நாயை கையில் எடுத்து வைத்துக்கொண்டு காரில் வந்தவனை நோக்கி கத்தியிருக்கிறான். இருந்தும் காரில் வந்தவன் பறந்து விட்டான். ”எனக்கு கூட தோன்றவில்லை அந்த உயிருக்கும் வலிக்கும் என்று. கடைசி நேரத்தில் அந்த உயிரை கையில் எடுத்து அதற்காக குரல் குடுத்த அந்த பிச்சைக்காரனும் கடவுள் தான். அவனுக்கு தர்மம் செய்து அவன் பசியை போக்கும் நானும் கடவுள் தான்” என்று பாரி நிறைவு செய்தபோது என்னிடம் அமைதி மட்டுமே மிஞ்சியது. மேற்கொண்டு எதுவுமே பேசவில்லை.
காரைக்குடியில் விழா முடிந்து திரும்பி வரும்போது நடந்தவற்றை என்னால் மறக்கவே முடியாது.மதிய நேரம் நல்ல உணவு முடிந்து எக்ஸ்பிரஸ் பேருந்தில் ஏறி டிக்கெட் எடுத்தபின்னர் சிறிது அரட்டைக்குப்பின் தாகம் எடுத்தது. நான் தண்ணீர் பாட்டிலை டீக்கடையிலேயே விட்டுவிட்டது தெரிந்தது. நானோ நீர் உடம்புக்காரன். எனக்கு தண்ணீர் அதிகம் தேவைப்படும்.
சரி சமாளிப்போம் என்று எண்ணி ஜன்னலில் காற்று வாங்கத்தொடங்கினேன். ஆனாலும் தாகம் வாட்டியது. இந்தப்பேருந்து இடை நில்லாப் பேருந்து என்பதால் அடுத்த நிறுத்தம் புதுக்கோட்டையில் அதற்கு இன்னும் சுமார் 40 கிமீ தூரம் இருந்தது. என்னால் முடியவில்லை. புதுக்கோட்டையில் தண்ணீர் வாங்கிக்கோள்ளலாம் அதுவரை தூங்கு என்ற பாரியின் அறிவுரையை ஏற்று உறங்கினேன்..... “வாட்டர் வாட்டர்” என்ற சத்தம் கேட்டு லேசாக என் உறக்கம் கலைந்தது.
கண் விழித்து பார்த்தால் புதுக்கோட்டை. பேருந்து மெதுவாக நகர்ந்த்து.
பேருந்து நிலையமாக இருக்கும் என்று என் தோளில் சாய்ந்து தூங்கிக்கொண்டிருந்த பாரியை எழுப்பினேன். எழுந்து பார்த்தபோது தான் தெரிந்தது ஐந்து நிமிடம் நின்று விட்டு புதுக்கோட்டையை விட்டு வெளியே வந்துவிட்டோம் என்று. எனக்கு வந்த கோபத்திற்கு பாரியை திட்டத்தொடங்கினேன். அவன் என்ன செய்தான். பாவம். என் தவறல்லவா இது. இனி பேருந்து திருச்சியில் தான் நிற்குமாம். அதற்கு இன்னும் 50 கிமீ இருந்தது. மீண்டும் தூங்க முடியவில்லை.
கண்டக்டர் அப்போது ஓட்டுநர் அருகிலிருந்த பாட்டிலில் தண்ணீர் குடிப்பதைக்கண்டு நான் அவரிடம் சிறிது நீர் தருமாறு கேட்டேன். அவரோ இப்போது தான் தீர்ந்த்தது என்றார்.
அந்த பேருந்தில் அதிக கூட்டமில்லாததால் யாரிடமும் அவ்வளவாக தண்ணீரே இல்லை.தாகத்தில் தவிக்கும் நானும் பாரியும் தான் அந்த பேருந்திற்கு அப்போதைய பொழுதுபோக்கு.
எப்படியோ தாக்குப்பிடித்து விழி பிதுங்கி வெளியில் எட்டிப்பார்த்தேன். திருச்சி 18 கிமீ என்ற பலகை தெரிந்தது. அந்த சமயம் பார்த்து பேருந்தின் வேகம் குறைந்த்தது. ஏன் என்று எட்டிப்பார்த்தால் ’திருவிழாக்கூட்டம்’. ஆளுயர அலகு குத்திக்கொண்டும், பூச்சட்டி எனப்படும் நெருப்பாலான சட்டிகளையும் தலையில் பால் குடங்களையும் கொண்டு சென்றனர் அப்பகுதி மக்கள்.
மதியவேளை சூடு தெரியாமல் இருக்க ரோடு முழுவதும் தண்ணீரை ஊற்றி இருந்தார்கள். ரோட்டில் ஊற்றுவதை என் வாயில் கொஞ்சம் ஊற்றினால் உங்களுக்கு புண்ணியமாக போகும் என்று சொல்ல சொல்ல அந்த வேன் அருகில் வந்தது. அதில் இருந்த சிறுமிகள் அனைவருக்கும் தண்ணீர் பாக்கெட்டுகளை கொடுத்தனர். சிலர் நீர் மோரும் ஊற்றித்தந்தனர். ஒளிவிளக்கு தெரிந்தது. நாங்கள் அருகில் வந்த போது எங்கள் பேருந்து வேகம் எடுத்தது. தண்ணீரை பார்க்காமல் இருந்திருந்தாலும் கூட இவ்வளவு தாகம் எடுத்திருக்காது. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை.
கடைசியாக திருச்சி வந்தடைந்தோம். அவசர அவசரமாக இறங்கி அங்கு இருந்த கடைக்கு ஓடிச்சென்று ஐம்பது ரூபாய் நோட்டை நீட்டி தண்ணீர் பாட்டில் வாங்கினேன். தாகம் தீர்ந்தது. குடித்துவிட்டு பெருமூச்சு விடுகையில் எதிரில் காணமுடியாத கோலத்தில் பிச்சைக்கார சிறுமி கையேந்தி நின்றிருந்தாள்.
அவள் கை என்னை நோக்கி இருந்தது.
என்னையறியாமல் என் கைகள் தண்ணீர் வாங்கிய மீதிப்பணத்தை அப்படியே அவளிடம் கொடுத்தது. அவளது முகத்தில் சாப்பிடப்போகிறோம் என்று அவ்வளவு நிறைவு. அருகில் நண்பன் பாரி என்னைப்பார்த்து புன்னகைத்தான்.
இருவருக்குமே பசி தான். பேருந்தில் என்னிடம் பணம் இருந்தது - ஆனால் பசியாறவோ வாங்கறவோ ஒன்றுமே இல்லை. இவர்கள் முன் எல்லாமே இருக்கிறது ஆனால் வாங்க பணம் இல்லை…
அன்று முதல் இன்றுவரை நான் உண்டியல்களை மதிப்பதே இல்லை… அடுத்தவருக்கு உதவுவதால் நான் கடவுளாகிறேன் என்றால் நான் தர்மம் செய்வதில் பிழையேதும் உண்டோ?