அந்தத் தெருவுக்கு என்ன பெயர் என்றெனக்குத் தெரியாது. பாய் தெரு என்றுதான் அழைப்பார்கள். காரணம் அங்கு இருப்பவர்கள் எல்லாருமே இஸ்லாமிய மார்க்கத்தை பின்பற்றுகிறவர்கள். எங்கள் வீடு நகர்ப்புறத்தில் இருப்பதனால் எனக்கும் அந்த தெருவுக்கும் சம்பந்தமில்லை. அடிக்கடி அந்தப்பக்கம் போயிருக்கிறேன். சற்று வித்தியாசமான அமைப்பாக இருக்கும். ரமலான் மாதங்களில் நோன்பின் பொழுது ஒரு அமைதியையும் பண்டிகை தினத்தில் கொண்டாட்டத்தையும் அந்த தெருவில் காணலாம்.
அந்த தெருவுக்குள் நான் சென்றிருக்கிறேன் ஆனால் எந்த வீட்டிற்குள்ளும் சென்றதில்லை. அந்த வீட்டுப்பழக்க வழக்கமும் நாங்கள் கடைபிடிக்கும் பழக்க வழக்கமும் சற்று மாறுபடுகிறது. இந்த மாறுபாடுகளை நான் தஞ்சாவூரில் கண்டிருக்கிறேன். கீழவாசல் பகுதிகளில் இருக்கும் இஸ்லாமிய மக்கள் குடியிருப்புக்கு என் உறவினர் ஒருவருடன் சென்றிருக்கிறேன். சர்வ சாதாரணமாக இந்த வீடுகளுக்குள்ளோ வாழ்க்கை முறைக்குள்ளோ எவராலும் நுழைந்து விட முடியாது. சில நேரங்களில் அவை எப்படி இருக்கும் என்றே யோசிக்க முடியாததாய் இருக்கிறது. நவீன இலக்கியமும் இந்த வாழ்வியலைப்பற்றி பேசியதில்லை.
சொல்லப்போனால், இஸ்லாமிய சமூகத்தைப்பற்றி அவ்வளவாக எந்த புதினமும் பேசியதில்லை. பேசப்பட்டவையாவும் மேலோட்டமான பார்வையாகவே அமைந்துள்ளது என்பது வாதம். அதேபோல் இஸ்லாமியப் பெண்கள் குறித்த செறிவான பார்வையொன்றை சொல்லும் புதினமும் இதுவரை வந்ததில்லை. அப்படியே வந்திருந்தாலும் அது ஒரு ஆண் எழுதியதாக, ஆணின் பார்வையில் பெண் எப்படி இருப்பாள் என்பதாகத்தான் இருந்திருக்கிறது; அவை பெண்ணை/பெண்ணியல்பை பிரதிபலிப்பதில்லை என்பதும் வாதம்.
சற்று அலசிப்பார்த்தால் இது உண்மையாக இருந்துவிட அதிக சாத்தியக்கூறுகள் உள்ளன.
இவ்விரண்டையும் சரிக்கட்டவே சல்மாவின் இந்நாவல் படைக்கப்பட்டிருப்பதாய் நான் உணர்கிறேன். இந்த நாவல் பெண்ணின் ஆழத்தை பேசுகிறது என்று சொல்கிறார். அது நூறு சதவிகிதம் உண்மை.
அந்த நாவலின் பெயர் ‘இரண்டாம் ஜாமங்களின் கதை’. காலச்சுவடு பதிப்பகம். இந்த ஆண்டில் நான் படித்த முதல் நாவல்.
கதை நிகழ்வின் களமோ, காலமோ குறிப்பிடப்படவில்லை.
வெவ்வேறு விதமான மனநிலையை அந்த நாவல்கடக்கிறது. காதல் காமம் அருவருப்பு சோகம் வறுமை அவமானம் இழிவு மகிழ்ச்சி உறவு புனிதம் கொடுமை பொறாமை வஞ்சகம் என எல்லாவற்றையுமே எனக்கு ஒரு மேலோட்டமாக காட்டியது.
நாவலில் இடம் பெற்ற வஹிதா, மதினா, றைமா, ராபியா போன்ற பெயர்களும் அவர்களது பழக்க வழக்கங்களும், டெக்னிக்கல் டீட்டெயில்ஸ் எனப்படும் வழக்குச் சொற்களும் அவற்றின் பொருளும் எனக்கு அத்துப்படி, காரணம் நானும் இஸ்லாமிய மார்கத்தைச் சேர்ந்தவன்.
இந்த நாவலில் வரும் சில நம்பமுடியாத கட்டமைப்புகளை நேரில் பார்த்தவன் என்பதனால் அவற்றை ஏற்றுக்கொண்டு என்னால் கடந்துவிட முடிகிறது.
இந்த நாவலில் வரும் ஆண்கள் உள்நாட்டில் வியாபாரிகளாகவோ அல்லது பொருளீட்ட அயல்நாடு சென்றவர்களாகவோ இருக்கிறார்கள். பெண்களின் வாழ்வு மற்றவர்களால் முடிவுசெய்யப்படுகிறது. மீறல்கள் எல்லாச் சமுதாயங்களிலும் எல்லா இனக் குழுக்களிலும் இருப்பவையே. சில சமுதாயங்கள் இவற்றைப் பேச அனுமதிப்பதில்லை. அனுமதிக்கப்படாததைப் பேசுகிற துணிவுடையவர்கள் எப்போதும் தோன்றியிருக்கிறார்கள்.
நோன்பு கஞ்சி காய்ச்சுமிடம், மரணம் நிகழ்ந்துள்ள வீடு, திருமண வீடு போன்ற மூன்று நிகழ்வுகளில் "பெண்மொழி" பேசப்படுகிறது. இன்பம், துன்பம் என இருவேறுப்பட்ட களமாக இருந்தாலும் பெண்ணின் அகம் சார்ந்த ஆணை விட கூடுதலாக பரவசப்படும் நிலையையே பேசுகின்றனர்.
முதல் பத்தியில் சொல்லப்பட்டிருந்தது போல, நான் நேரில் கண்ட பகுதிகளை அப்படியே இந்த நாவல் பிரதிபலித்தது. காட்சிகள் கண்முன்னே நடப்பதாய் விவரித்திருக்கிறார் அதுவும் மிக மிக எளிய நடையில்.
இந்த நாவல் ஆங்காங்கே சில இடங்களில் தொய்வு பெறுகிறது. 520 பக்கங்கள் கொண்ட நாவலை ஆரம்பம் முதலே விறுவிறுப்பாக கொண்டுசெல்ல முடியாது எனவும் நடுவில் சில இடங்களில் தொய்வு பெறத்தான் செய்கிறது எனவும் ஆசிரியர் சல்மா அவர்களே முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் ஒரு கட்டத்துக்கு மேல் மிக வேகமாக நகரத் தொடங்குகிறது.
”வரலாறு என்பது நடந்தது அல்ல. நடந்ததாக எழுதிவைக்கப்பட்டது தான் வரலாறு” என்றார் ஜெயமோகன். ஆம், இப்படி ஒரு சமூகம் இருப்பதாகவும் அதனினுள் ஒரு உணர்வுகளை ஏந்திய மக்கள், அந்த சமூகத்தில் பெண்களுக்கான இடம் என்பவற்றையெல்லாம் தெரிந்துகொள்வதற்காகவாவது இது போன்ற படைப்புகள் வரவேண்டும் என்பதே என் கருத்தும் கூட…
- ஷா