சமீபத்திய பதிவுகள்

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

20 August 2014

ஞாயிறு மாலைகளின் சமதர்மங்கள்


சில ஞாயிறுகளின் மாலையில் பழவந்தாங்கலிலிருந்து சென்னை கடற்கரை ரயில்நிலையம் வரையிலும் போய் வருவேன். சமீபத்திய ஒரு ஞாயிறும் அப்படித்தான். அறையிலும் யாருமே இல்லை. புத்தகமும் இசையும் தவிர 11 மணிநேரம் யாருடனும் பேசவில்லை. ஒரு காபி குடித்தால் நன்றாக இருக்குமென எண்ணி ரயிலில் ஏறியமர்ந்தேன். வழக்கம்போலவே கடற்கரை ரயில்நிலையத்தின் காபி சுவை திரும்பி வரும்வரை  நாவில் இருந்தது.

ஞாயிறு மாலையின் வெறுமையைப் போக்கும் இந்த ரயில் பயணத்தில்தான் அவரைக் கண்டேன். சாலைக்கு மேல் காற்றைக் கிழிக்கும் வேகத்தில் செல்லும் ரயிலின் வாசலில் நின்றபடியே பயமுறுத்தும் ஆழத்தில் செல்லும் பேருந்துகளில் மேல்பகுதியை ரசித்தபோது அவரது குரல் கேட்டது. பாதி அழுக்கில் கசங்கிய அரைக்கை சட்டை இரண்டு பொத்தான் கழட்டப்பட்டு காற்றாடிக் கொண்டிருந்தது. அதற்கேற்ற ஒரு கால்சராய் ரப்பர் செருப்பும் மூக்குக் கண்ணாடியும் அணிந்திருந்தார்.

ஐந்து ரூபாய்க்கு ஆசீர்வாதம் செய்யும் திருநங்கைகள், பழம் விற்கும் சிறுவர்கள், தர்மத்தின் புகழ்பாடிப் பிச்சையெடுப்பவர்கள், பார்வையற்ற வியாபாரிகள், காதடைத்து இசையிலும் காணொளியிலும் மூழ்கிய இளைஞர்கள், செய்தித்தாள்/ வாரப்பத்திரிக்கை படிக்கும் நடுத்தர வயதினர், சிரித்துக்குலுங்கும் நங்கைகள், வாசற்கம்பி பிடித்து தொங்கிக்கொண்டு வரும் வாலிபர்களுக்கு மத்தியில் அவர் சற்று வித்தியாசமாய்த் தான் தெரிந்தார்.

என்னை நெருங்கியபோது வீசிய வியர்வை வாசம் சைதாப்பேட்டையின் ஆற்றுப்பாலத்தைத் தாண்டிய நாற்றத்தையும் எதிர்க்காற்றையும் கடந்து வந்தது. அவரை இதற்குமுன் எங்கோ பார்த்த ஞாபகம் ஒரு மூலையில் உண்டானது. இலக்கியக் கூட்டங்களில் பார்த்திருக்கலாம் அல்லது சாலைகளில் நடமாடிக் கொண்டிருந்தபோது அல்லது கடற்கரையில் அல்லது சமுதாயக் கூடங்களில்  அல்லது.

இவரைப் போன்றவர்கள் சென்னை முழுக்க உண்டு. பாதி மார்மறைத்த மாடர்ன் பெண்ணொருத்தி வீசிச் சென்ற ஏளனப்பபார்வை அவரை ஒன்றுமே செய்யவில்லை. சுற்றியிருந்த யாவரும் அவரை பஸ்சுக்கு காசில்லையென கேட்கும் மனிதராகத்தான் பார்த்தனர்.

சுமார் நாற்பது வயதையொத்த அவர் தன் தோல் சுருங்கிய முகத்தில் ஒரு சிரிப்பைக் கொணர்ந்து முதல் வார்த்தையை உதிர்த்தார். பாதி நரைத்த தலை கலைந்திருந்தது. இறங்குவோரும் ஏறுவோரும் அவரை மேலிருந்து கீழாக பார்த்துச் சென்றனர். எதையுமே கண்டுகொள்ளாத அவர் சற்று தொய்ந்த குரலில் 'தாம்பரமா?' என்றார்.

என்னைப் பார்க்க அவருக்கு எப்படி இருந்தது எனத்தெரியவில்லை. ரயில் பரங்கிமலையைத்தான் தாண்டியிருந்தது. தாம்பரத்திற்கு இன்னும் தூரம் இருந்தது. அவரைப் பார்க்கையில் தாம்பரத்திற்கு வழி கேட்பவர் அல்லது தாம்பரம் வந்தா சொல்லுங்க என்பவரைப் போலத்தெரியவில்லை. இவ்வளவு சுற்றத்திலும் அவர் என்னிடம் ஏன் கேட்டார்?
ஒன்று மட்டும் நிச்சயம். அவரைப் பார்க்கையில், அவர் கடந்த கால நானாக இருந்திருக்கலாம் அல்லது நான் எதிர்கால அவராக ஆகலாம்.

மாதம் இருபத்தி ஐந்தாயிரம் சம்பாதிக்கும் என் நண்பனொருவன் சனிக்கிழமைகளில் கோட்டூர்புரம் அண்ணா நூலகத்திற்கு செல்வான். அருகிலிருக்கும் அண்ணா பல்கலைக்கழக கேண்டீனில் சாப்பிட்டு ஒரு மரத்தடியில் அமர்ந்த அவனிடம் ‘தம்பி சாப்பாடு எதுவும் வேணுமா?’ என்று அருகில் உணவருந்திய குடும்பம் கேட்டிருக்கிறது. கலைந்த தலையும் வியர்வை உடலும் சாதாரணச் சட்டையும்தான் ஒரு மனிதனை தீர்மானிக்கிறதா?

அந்த ரயிலில் இருந்த பகட்டு இளைஞர்களின் பார்வையும் என் நண்பனைப் பார்த்த குடும்பத்தின் பார்வையும் ஒன்றாகத்தான் இருந்தது. ஞாயிறு மாலைகளில் வெறுமையைப் போக்கவும் வாழ்வைத் தேடியும் பலர் இப்படி பலர் அலைவதுண்டு. சென்னை என்பது சாதாரண விஷயமல்ல. இது ஒரு அடையாளம். இங்கு இவர்களைப் போன்றவர்கள் ஏராளம். இவர்கள் சராசரிகள், சாமானியர்கள், சிலபல சம்தர்மங்களும் எட்டாதவர்கள், அடிப்படைவாதிகள் எந்த ஆடம்பரமும் தேவைப்படாதவர்கள். மிக முக்கியமாக மனிதர்கள். நானும் அப்படி ஒருவனாகத்தான் இருக்க முயற்சிக்கிறேன். ஆனால் லௌகீகம் யாரைத்தான் விட்டது.    

தாம்பரம் வரை சென்றிருந்தாலோ அல்லது அவருடன் பேசியிருந்தாலோ அது ஒரு சாதாரண நிகழ்வாகவே அமைந்திருக்கும். (அந்த உரையாடல் யார் நீங்க என்ன எப்படிசொந்த சோகத்தைத் தாண்டி உச்சம் பெறாமல் இருக்கும் பட்சத்தில்) இதில் ஒரு பிரமிப்பு இருக்கிறது. என்னிடம் மட்டும் ஏன் பேசினார் என்ற பிரமிப்பு. அதை ஒருபொழுதும் இழந்துவிடக்கூடாது.

தாம்பரமா என்றவரிடம்பழவந்தாங்கல் சார்’ என்று சொல்லிச் சிரித்துவிட்டு இறங்கினேன். இறங்கியும் சிரித்துக்கொண்டே இருந்தேன்.

-             -   ஷா

19 August 2014

கன்னி – II


கன்னி’ நாவல் பற்றிய எனது முதல் பதிவு.

~~OO~~

கடந்த வாரம் சேலம் சென்றிருந்தேன். அண்ணனின் மகனுக்குப் பிறந்தநாள் விழா. ஈரோட்டில் புத்தகத் திருவிழா நடந்து கொண்டிருப்பதைக் கேள்விப்பட்டதும் அங்கு செல்ல வேண்டுமென்ற ஆவல் தொத்திக் கொண்டது. சென்னையில் கிடைக்காத புத்தகமா இங்கே கிடைக்கப் போகிறதென்று அண்ணியும் பெரியம்மாவும் அங்கே செல்வதைத் தடை செய்ய முயற்சி செய்தார்கள். அவ்வளவு புத்தகங்களுக்கு மத்தியில் நிற்பதே பரமசுகம். ஏற்கனவே வாசிக்காத பல புத்தகங்கள் இருப்பதால் இரண்டு புத்தகங்கள் மட்டும் வாங்கலாம் என்று சென்றேன்.

காலச்சுவடு பதிப்பகத்தில் தளவாய்சிங்கத்தின் முழுத் தொகுப்பும் 60% கழிவில் கிடைத்தது. அதையும் பெருமாள் முருகனின் ‘மாதொருபாகன்’ நாவலையும் வாங்கிக் கொண்டு தமிழினி பதிப்பகத்தில் ஜெயமோகனின் ‘காடு’ நாவல் வாங்கச் சென்றேன்.இது நான் திட்டமிட்டு வாங்கலாம் என்றிருந்த புத்தகம். ‘காடு’ நாவலின் அருகே சு.வேணுகோபாலின்‘ஒரு துளித் துயரம்’ என்னைப் பார்த்து சிரிப்பது போல் இருந்ததால் அதையும் வாங்கிக் கொண்டு பில் போடச் சென்ற போது தான் எனக்கான இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.

"ஒரு துளித் துயரம் வாசிச்சிருக்கீங்களா?"என்றார்.

"இல்ல சார், இந்த புக் பத்தி ஃப்ரண்ட் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன்"

"அந்த புக்க எழுதினது நான் தான்"

"சார்ர்ர்ர்!"

எனது சந்தோஷத்திற்கு அளவே இல்ல. இதற்கு முன் அவர் புத்தகம் ஏதும் வாசித்திருந்தால் அதைப் பற்றி சிறிது நேரம் அவரோடு உரையாடியிருக்கலாம்.

அவரிடம் ‘ஒரு துளித் துயரம்’ புத்தகத்தில் கையெழுத்து வாங்கி விட்டு "ஃப்ரான்சிஸ் கிருபாவோட ‘கன்னி’ நாவல் இப்போ எங்கயுமே கிடைக்கிறது இல்லையே? அடுத்த பதிப்பு போடலயா சார்?" என்றேன்.

"அடுத்த வருஷத்துல வந்துடும்னு நினைக்கிறேன்"

"சார், ஃப்ரான்சிஸ் கிருபாவோட நம்பர் இருந்தா கிடைக்குமா?"

அவரது மொபைலில் நம்பரைத் தேட ஆரம்பித்ததும் மனம் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தது. ரசித்து வாசித்த நாவலின் நாயகனிடம் பேசப் போகிறோம் என்ற குதூகலம்.

என் துரதிர்ஷ்டம் அவரிடம் கிருபாவின் எண் இல்லை. "இங்க காஷியர் ஒருத்தர் இருப்பார். சாப்பிட போய்ருக்கிறார். கொஞ்ச நேரத்துல வந்துடுவார்.அவர் கிட்ட கேட்டுப் பாருங்க. கிடைக்கும்" என்றார்.

அவரது (சு.வேணுகோபால்) மொபைல் நம்பரை வாங்கிக் கொண்டு கிளம்பினேன்.

வேறு சில புத்தகங்களை வாங்கிக் கொண்டு மறுபடியும் தமிழினி பதிப்பகம் வந்த பொழுது அந்தக் காஷியர் (தமிழினி பதிப்பகத்தின் உரிமையாளர் என்பதைப் பிற்பாடு தெரிந்து கொண்டேன்) இருந்தார்.

கடையில் அதிகக் கூட்டம் இருந்ததால் என்னைக் கண்டுகொள்ளவில்லை.அவர் பார்க்கும் பொழுது இன்முகத்துடன் இருக்கவேண்டுமென்றெண்ணியதால் சிரித்துக் கொண்டே இருந்தேன். அவர் என்னை ஏறிட்டுப் பார்க்கவும் தலைவரைப் பார்த்ததும் அசடு வழிந்து சிரிக்கும் தொண்டனைப் போல ஒரு எக்ஸ்‌ப்ரெஷன் கொடுத்தேன்.

"சொல்லுங்க" என்றார்.

"கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வேணுகோபால் சார்கிட்ட பேசிட்டு இருந்தேன். அவங்க கிட்ட ஃப்ரான்சிஸ் கிருபாவோட நம்பர் கேட்டேன். உங்ககிட்ட கேக்க சொன்னாங்க"

"எதுக்குப்பா நம்பர்?"

"அவரோட கன்னி நாவல் வாசிச்சேன். ரொம்ப பிடிச்சிருந்தது.அதான் அவர் கிட்ட பேசலாம்னு"

"ஓ... கன்னி வாசிச்சிருக்கீங்களா? எப்படி இருந்துச்சு?"

"இதுவரைக்கும் நான் வாசிச்சதுலயே பெஸ்ட் கன்னி தான் சார்"

"ம்ம்ம்ம். கிருபா எனக்கு ஃப்ரண்ட் தான். அவனத் தான் நானும் தேடிட்டு இருக்கிறேன். அவன் நம்பர் உங்களுக்கு கிடச்சாலும் அவன் கிட்ட பேசாதீங்க"

அதிர்ச்சியுடன், "ஏன் சார் இப்டி சொல்றீங்க?"என்றேன்.

"பேசவேணாம்ப்பா. அது உனக்கும் நல்லது அவனுக்கும் நல்லது"

“…………”

"கன்னி நாவல் எல்லாம் புரிஞ்சதா?"

"அந்த நாவல முழுசா புரிஞ்சுக்க முடியல. எனக்கு நிறய சந்தேகம் இருந்துச்சு"

அவசரமாய் "வாங்க வாங்க. இங்க உக்காருங்க. பேசுவோம்.என்ன சந்தேகம் சொல்லுங்க?"

"சந்தேகம்னு சொல்றத விட நான் புரிஞ்சது சரியான்னு தெரியனும். நாவல் முழுக்க வந்த அமலா, கடைசில காணாம போய்ட்ராங்க. கடைசி சேப்டர் ஃபுல்லா சாரா. சாராக்கும் அமலாக்கும் நிறய ஒற்றுமை இருக்கு. அதனால அமலாவும் சாராவும் ஒன்னுனு தோணுது"

"ச்சே ச்சே அதெல்லாம் இல்லவே இல்ல. சாரா வேற. அமலாக்கும் பாண்டிக்கும் காதல் கிடையாது"

“கண்டிப்பா காதல் தான். அப்படி அமலாவும் சாராவும் ஒன்னு இல்லனு சொன்னாலும், அமலா மேல இருந்த காதல் தான் உடனே பாண்டிக்கு சாரா மேல வந்துச்சு"

"அந்த புக்ல அவங்க ரெண்டு பேருக்கும் காதல்ன்னு எங்க வருது சொல்லுங்க?"

"எங்கயும் நேரடியா இல்ல. ஆனா மறைமுகமா அவர் நிறய இடத்துல சொல்றார்"

"ம்ம்ம் ஹ்ம்ம் இல்ல"

‘கன்னி’ நாவலைப் பற்றிய அவரது பார்வையைத் தெரிந்துகொள்ளலாம் என கேட்டுப் பார்த்தேன். "இன்னொரு முறை நாவலை வாசிங்க. உங்க எல்லா கேள்விக்கும் பதில் கிடைக்கும். அது நிச்சயமா இன்னொரு முறை வாசிக்கிற மாதிரியான நாவல் தான்"என்றார்.

அது நிச்சயமாக இன்னும் எத்தனை முறை வேண்டுமானாலும் வாசிக்கும்படியான நாவல் என்பதால் வேறெதுவும் பேசாமல் ஆமோதிக்கும் வண்ணம் தலையசைத்தேன்.

"இன்னொரு முறை வாசிச்சிட்டு ஸ்பென்சர் (தமிழினி பதிப்பகம் ஸ்பென்சரின் தரைத் தளத்தில் உள்ளது) வாங்க. பேசுவோம்" என்றார்.

"கண்டிப்பா. கன்னி நாவல் அடுத்த பதிப்பு விடலாமே சார். எங்கயுமே கிடைக்க மாட்டேங்குது.”

"அடுத்த பதிப்பு விட்டு என்ன செய்ய? புரிய மாட்டேங்குதுன்னு சொல்றாங்க. கொஞ்ச பேர் தான் அந்த நாவல ரசிக்கிறாங்க"

"அவர் அப்டி ஒரு நாவல எழுதிட்டு அதுக்கு அப்புறம் ஏன் சார் எதும் எழுதல?"

நீண்ட பெருமூச்சு மட்டும் பதிலாய் வந்தது.

"யாரோட புக்லாம் வாசிச்சிருக்கீங்க?"என்றார்.

"குறிப்பிட்டு யாரையும் வாசிக்கல. தமிழ்ல க்ளாஸிக்ஸ்ன்னு சொல்ற புக்ஸ்லாம் வாசிச்சிட்டு இருக்கிறேன்"

“க்ளாஸிக்ஸ்னா?”

கெத் ஆனா புத்தகத்தின் பெயரைச் சொல்லி அசத்தலாம் என்று எண்ணியதால், அவர் கேட்கவும் ஒரு எழுத்தாளர் பெயரும் நினைவில் வர வில்லை.

"எஸ்.ராமகிருஷ்ணன்ட்ட இருந்து தான் ஸ்டார்ட் பண்ணேன். அவர் சிறந்த புத்தகம்னு காமிச்ச புக்ஸ். தமிழ் க்ளாஸிக் ஸீரீஸ்ன்னு வர்ற புக்ஸ்லாம் வாசிக்கிறேன்" என்றேன்.

“எஸ்.ராமகிருஷ்ணன்க்கே இலக்கியம்னா என்னனு தெரியாது.இதுல அவர் என்ன புக்ஸ் சொல்றது?"

"ஹா ஹா அது என்னவோ உண்மை தான். அவரோட யாமம், நிமித்தம் வாசிச்சிட்டு கடுப்பாகிடுச்சு"

"இப்போவாது புரிஞ்சுகிட்டீங்களே. அதுவே நல்ல விஷயம்”

சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்த பின் சில நாவல்களைப் பரிந்துரைத்தார்.

"கைல பணம் இல்ல. கார்ட் அக்ஸெப்ட் பண்ணுவீங்களா?"என்றேன்.

“உங்களுக்கு எவ்ளவ் புக்ஸ் வேணுமோ எடுத்துகோங்க.சென்னை வந்த அப்புறம் கொடுங்க"

"இல்ல சார். அது சரியா வராது"

“அட. நீங்க காசே கொடுக்காட்டியும் பரவால. எடுத்துட்டு போங்க. 'கன்னி ரீடர்க்கு இது கூட பண்ண மாட்டனா?'"என்றார்.

சும்மா யாராவது புத்தகம் பரிந்துரைத்தாலே வாங்கி விடுவது எனது வழக்கம். இதற்கு மேல் வாங்காமல் இருந்தால் எப்படி!

அவர் பரிந்துரைத்த புத்தகங்கள்.

எம்.கோபாலகிருஷ்ணனின் மணல் கடிகை

சு.வேணுகோபாலின் ஆட்டம்

கண்மணி குணசேகரனின் அஞ்சலை

பால்ஸாக்கின் செந்நிற விடுதி

எம்.கோபாலகிருஷ்ணனின் ‘மணல் கடிகை’ புத்தகத்தை வாசிக்கத் தொடங்கியுள்ளேன். அட்டகாசம்!

பலராலும் மாபெரும் இலக்கியவாதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டவர்களின் ஒரு சில படைப்புகளைத் தவிர பலவற்றின் அருகில் அண்ட முடியாது. அப்படியிருக்கையில் யாராலும் கண்டுகொள்ளப்படாமல் இருக்கும் இவர்கள் போன்ற சிலரின் படைப்புகள் வேறு பரிணாமத்தில் இருக்கின்றது.

‘கன்னி’ நாவலை மறுவாசிப்பு செய்து விரைவில் விரிவாக எழுதுகிறேன்.

- த.ராஜன்