“பிரார்த்தனை செய்யும் உதடுகளை விட உதவிடும் கரங்கள் மிகச்சிறந்தவை”
என்பது போல ‘தானே’ புயலின் துயர் துடைக்கும் விகடனுக்கு எங்கள் அன்பு வணக்கங்கள்.
ஈரோடு மாவட்டம் கொங்கு பொறியியல் கல்லூரியின் சார்பாக மற்றும் கொங்கு பாலிடெக்னிக் கல்லூரி சார்பாக தானே நிவாரணத்திற்கு நிதி திரட்டப்பட்டது.
மேலும் Enthusia 2012 கலைநிகழ்வின் பரிசுத் தொகை என ரூ.2,28,428 நிதி விகடன் நிருபரிடம் வழங்கப்பட்டது. இதை முன்னின்று செய்த மாணவர்களின் கடிதம் இது.
பொதுவாக சமூக பிரச்சனைகள் பற்றி பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்கறை இல்லை என்று ஒரு பேச்சு உண்டு. அது பெரும்பாலும் உண்மையாக இருப்பதில்லை. ஏனென்றால் நாங்கள் அவ்வாறு இல்லை. நாங்கள் தவறாமல் படிக்கும் பத்திரிக்கைகளில் விகடனும் ஒன்றாகும். இவ்வாறாக விகடன் வாசிப்பதை வழக்கமாக கொண்ட நாங்கள் 'தானே துயர் துடைப்பை'யும் அதற்கான தங்களின் முயற்சியையும் கண்டு வியந்தோம். திருப்பூரின் காது கேட்காதோர் பள்ளியில் இருந்து வந்த நிவாரண தொகை என நீங்கள் சுட்டி காட்டியிருந்ததை படித்தபோது எங்களுக்கு பொட்டில் அறைந்தது போல் இருந்தது. சிறு குழந்தைகளுக்கு இருக்கும் மனிதாபிமானம் ஏன் நமக்கு இல்லாமல் போனது என்று எண்ணி வருந்தினோம். எங்கள் கல்லூரியின் சார்பில் கண்டிப்பாக நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்று ஒரு எழுச்சித்தீ கொழுந்து விட்டது. இதற்கு முழுமுதற் காரணமாய் இருந்த விகடனுக்கு நன்றி.
இதற்கான முயற்சியில் இறங்குவதற்கு முன்பு நாங்கள் எங்களை விகடனின் www.vikatan.com/thane கொண்டு தயார்படுத்தினோம். எங்கள் கல்லூரி முதல்வரிடம் ஜூனியர் விகடனில் வெளிவந்திருந்ததை காண்பித்து நிதி திரட்ட அனுமதி கோரினோம். எங்கள் முதல்வரும் இதற்கு முழு சுதந்திரம் அளித்தார்.
நாங்கள் வகுப்பு வகுப்பாக சென்று தானே பற்றியும் திருப்பூர் குழந்தைகளின் உதவி பற்றியும் பேசினோம். நாங்கள் விகடன் இணையத்தில் இருந்த திரு. தமிழருவி மணியன் ஐயா அவர்களின் உருக்கமான பேட்டியையே வகுப்புகளில் பேசினோம். இவ்வாறாக எங்கள் ஒவ்வொரு செயலிலும் விகடனின் உதவி இருந்தது. அதனாலேயே தான் எங்களால் இவ்வளவு நிதி திரட்ட முடிந்தது. திரட்டப்பட்ட நிதியை விகடனிடம் ஒப்படைக்க வரைவோலைகளை தயார் செய்து, கலைவிழாவில் மாணாக்கர் முன்பு வழங்குவதற்கு திட்டமிட்டோம். அதற்காக சேலத்தின் விகடன் நிருபர் திரு. ராஜேஷ் அவர்களையும் அழைத்தோம். விழாவிற்கு திரு. தமிழருவி மணியன் அவர்கள் சிறப்பு விருந்தினராக வருகிறார் எனக்கேட்டதும் நாங்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. யாருடைய பேச்சை நாம் பேசினோமோ அவர் மூலமாகவே நிதியினை கொடுப்போம் என்று முடிவுசெய்தோம்.
விழா இனிதே நிறைவுற்றது.
இந்நிகழ்வு குறித்து ஜூனியர் விகடனில்
செய்திக்குறிப்பு
ஒன்று வெளியிடப்பட்டது.
எங்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும் என்றோ, எங்கள் பெயரும் புகைப்படமும் பத்திரிக்கையில் வரும் என்பதர்க்ககவோ நாங்கள் செய்யவில்லை. உங்களைப் பார்த்து நாங்கள் செய்து போல எங்களைப்பார்த்து யாரேனும் செய்வார்கள் என்று எண்ணியே நாங்கள் இதை செய்தோம். எங்களின் இம்முயற்சியினை கேள்விப்பட்ட இரு வேறு கல்வி நிறுவனங்களின் மாணவர்கள் எங்களை அழைத்து என்ன செய்வது என்று கேட்டனர்.
அவர்களுக்கு எண்களின் பதில்: முயற்சி திருவினையாக்கும்....
No comments:
Post a Comment
கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன