வந்து நின்ற பேருந்தில் ஏற வந்தவள்
ஐந்து ஆண்கள் மட்டும் இருப்பதைப் பார்த்து
யோசனையுடன் பின் வாங்குகிறாள்.
"மாமாவோடு போய் விளையாடு"
என்று சொல்லிய அனிதா அக்கா
இன்றெல்லாம் விளையாட கூப்பிட்டால்
தயங்கித் தயங்கி அனுப்புகிறாள்
பேசிக்கொண்டிருந்த தோழி
சரியாய் இருக்கும் மாராப்பை
மீண்டுமொருமுறை சரி செய்துகொள்கிறாள்.
அம்மாவும் சகோதரியும் கூட
என்னைப்பார்த்து
பயப்பட ஆரம்பித்துவிட்டார்கள்.
பெரிதாய் ஒன்றும் மாறிவிடவில்லை.
வன்கொடுமையால் கொல்லப்பட்ட சிறுமி
என்று செய்தி வந்த அதன்பிறகு
ஆண் பிள்ளை பிறந்த வீடுகளின்
சங்குகளில் கள்ளிப்பால் தயாரானாலும் ஆகலாம்.
கள்ளிப்பால் எதிர்த்த தாய் கூட
பெண் குழந்தை வேண்டாமென பயப்படுகிறாள்.
அடுப்பூதி அடைந்து கிடந்தவர்கள்
தாங்களே உள்ளே போய் அடைத்து கொள்கிறார்கள்.
பெண் சுதந்திரம் கொடுத்தோமா?
அவர்களிடமிருப்பதை எடுக்காமல் இருந்தால் போதும்.
பூக்களை பறிக்காதீர்கள்
என்று சொன்னால் எவன் கேட்டான்?
காவல் காரன் தடி எடுக்கும் வரை. எடுத்தும் கூட.
No comments:
Post a Comment
கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன