சமீபத்திய பதிவுகள்

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

5 June 2014


இறுதி உபாசனை

மரணம் லேசான காரியமல்ல. மரணத்தை தேடிக்கொள்வதற்கு ஒருவித அசாத்திய துணிச்சல் தேவைப்படுகிறது.

எனக்கு அவ்வளவு தைரியம் இல்லை என்று நினைத்திருந்தேன். நான் சாகவேண்டும் என முடிவெடுத்திருந்த போது மணி ஐந்து நாற்பதை தாண்டியிருந்தது. அப்போது நான் துவைத்த துணிகளை காயப்போட்டுக் கொண்டிருந்தேன். என் முடிவு அவ்வளவு சாதாரணமாக இருந்துவிடக்கூடாது என்றெல்லாம் ஆசைப்பட்ட காலங்களை நினைத்துப்பார்க்கையில் ஏமாற்றமே மிஞ்சுகிறது.


நான் இறந்துவிட்டால், இனி மாதா மாதம் சம்பளத்தில் அம்மாவுக்கு புதுப்புடவை எடுக்க முடியாது, அண்ணனின் புதுச்சட்டைகளை எடுத்து போட்டுக்கொள்ள முடியாது, அனுவை வர்ணித்து கவிதைகள் எழுத முடியாது, ”என்கூட பேசாம இருக்கமுடியாதுன்னு அழுதியே அது பொய்தானேஎன்று அவளை டார்ச்சர் செய்ய முடியாது, வேலைக்கு போக முடியாது, ஹைதராபாத் பிரியாணி சாப்பிட முடியாது, வாசிக்கமுடியாது, நண்பர்கள் எழுதும் கட்டுரைகளை விமர்சனம் செய்ய முடியாது, பாரியிடம் தத்துவங்கள் பேச முடியாது, அராத்ரிக்காவுக்கு மன்னிப்புக்கடிதங்கள் அனுப்ப முடியாது, ஃபேஸ்புக்கில் லைக் போட முடியாது, குடிக்க முடியாது, புகைக்க முடியாது, வித்யாலயா ஸ்கூல் ரோட்டில் இரண்டுகைகளையும் விட்டபடியே வண்டி ஓட்ட முடியாது, மழையில் நனையமுடியாது, நாய்க்குட்டிகளுடன் விளையாட முடியாது, இசையில் திளைக்கமுடியாது, இரவின் அழகை ரசிக்க முடியாது, இவ்வளவு ஏன், இன்னொரு முறை வாழ முடியாது, இன்னொரு முறை சாகவும் முடியாது!

இதையெல்லாம் கடைசியாக செய்துபார்த்து விடவேண்டுமென்று மனம் ஆசைப்படுகிறது. இதையெல்லாம் செய்துபார்த்தால் மீண்டும் வாழவேண்டும் என்ற ஆசை வந்துவிடுமோ என்ற பயமும் உள்ளிருந்து சிரிக்கிறதுநான் இறந்துவிட்டால் உலகம் நின்றுவிடப்போகிறதா? சூரியன் உதிக்காதா? பூக்கள் பூக்காதா? இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுமா? அல்லது நம் கம்பெனியாவது லீவ் விடுவார்களா? எதுவுமே கிடையாது! சிறு அழுகை! ”பாவம் இப்படி பண்ணிட்டானேஎன்ற வசனம். மிஞ்சி மிஞ்சிப்போனால் ஒரு மாதத்தில் எல்லோரும் மறந்துவிடுவார்கள். ஒருநாள் யாரேனும் அனுவை நிலவுடன் ஒப்பிட்டு வர்ணித்து கவிதை எழுதினால் அவளுக்கு என் நினைப்பு வரலாம். அவ்வளவே! பின் தயக்கம் எதற்கு?

கண்களை மூடிக்கொண்டு  மரணத்தை சீண்டிப்பார்க்க ஆயத்தமானேன்!குதித்தேன். மரணத்தைக்கண்டு எனக்கு பயம் இல்லை. இதோ என் முடிவை நெருங்கிக்கொண்டிருக்கிறேன். கடுகளவும்கூட பயந்துவிடக்கூடாது என்று பயந்த தருணத்தை கடந்துகொண்டிருக்கிறேன். கீழே விழுந்து சிதறும் வரையில் நான் என்ன வேண்டுமானாலும் நினைத்துக்கொள்ளலாம். என்ன சத்தம் வேண்டுமானாலும் எழுப்பலாம். அவளை தனியாக விட்டுவிட்டு செல்கிறேனே தவறு இழைத்துவிட்டேனா என்று நினைத்து அழலாம்.வேறென்ன செய்ய முடியும்?

தரையை நோக்கி நான் பயணித்துக்கொண்டிருக்கிறேன் மற்றவரின் பார்வைக்கு நான் விழுவதாய் தெரியலாம் ஆனால் என்னைப்பொருத்த மட்டிலும் நான் பயணித்துக்கொண்டிருக்கிறேன். இறுதி பயணம் அல்லது இறுதிப்பயணத்துக்கான பயணம்.என் தற்கொலை முடிவை அவள் எப்படி எதிர்க்கொள்வாள்?  கேவிக்கேவி அழுவாளா அல்லது துடைத்தெறிந்துவிட்டு போய்விடுவாளா எனத்தெரியவில்லை.

இப்போதைக்கு நான் தரையை தொடும்வரையிலும் பயந்துவிடக்கூடாது. ஆம். இது தற்கொலை அல்ல இது ஒரு திட்டமிட்டப்பட்ட மரணம் என்பது என்னையும் அவளையும் தவிர வேறு யாருக்கும் தெரியாது.

என் மரணம் ஒரு விபத்துபோல் இருக்கவேண்டும் அதாவது விபத்தில் உயிரிழக்க வேண்டுமென்பது என் திட்டம். அது சாலை விபத்தாக இருந்தால் நான் யுவராஜிடம் வண்டியோட்டக் கற்றுக்கொண்டவன் என்பதற்கு அர்த்தமில்லமல் போய்விடும். மின்சாரத்தில் கையைவிட்டு என் மீது பாய்ச்சிக்கொள்ளலாம் என்றால் அது என் பெயருக்கு இழுக்கு. கல்லூரிக்காலங்களில் மின்சாரத்துடன் விளையாடிய பொறியாளன் என்ற முறையில் அது எனக்கு இழுக்கெனப்படுகிறது. ரயிலிலிருந்து விழலாம் என்றாலும் அந்த அளவுக்கு நான் விசிறு பிடித்தவனல்ல. விஷம், தூக்கமாத்திரை, தூக்கு இவையாவும் விபத்தில் சேராது. எனவே தான் மாடியிலிருந்து விழுவதை தேர்ந்தெடுத்தேன்.

துணிகளை காயவைப்பதாய், காயவைக்கும் பொழுதில் கால்வழுக்கி தவறி விழுவதாய் திட்டம். அதற்காக நான் கால்சராயை முட்டி வரை ஏற்றிவிட்டிருக்கிறேன். துணி அலசிய சோப்புத்தண்ணீரை கீழே சிந்தி விட்டிருந்தேன். மாடியில் தடுப்பில்லாத இடத்தை துணிகளை காய வைத்திருக்கிறேன். இது விபத்து என நிரூபிக்க சற்று முன்புவரை  எனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஜாலியான குரூப் சேட்டில் பங்கேற்றிருக்கிறேன். என் கைபேசி ரஹ்மான் பாடல்களை ஒலித்துக்கொண்டிருக்கிறது. என்னால் தான் அவன் செத்தான் என்று அவளாக வாய் திறக்காதவரை, சத்தியமாக இது ஒரு விபத்துதான் என்று முடிவெடுக்கப்படும். அது ஒன்று போதும் எனக்கு.
நான் பயப்படவில்லை. அசுர வேகத்தில் என் உடல் தரையை நெருங்குகிறது. இதயத்தின் அதிவேகத் துடிப்பை நான் உணர்கிறேன்நான் குடியிருக்கும் இரண்டாவது மாடியை கடக்கிறேன். அறை முழுவதும் அவளது வாசம் நிரம்பிக்கிடக்கிறது. இந்த அரையில் எத்தனை நாள் தனியாக குடித்திருக்கிறேன் அழுதிருக்கிறேன். அப்போதெல்லாம் என் கண்முண்ணே நின்றவள் அனு. காதுமடலோரம் துள்ளிவிளையாடிய கூந்தலின் அழகை மட்டுமே நாள் முழுவதும் பார்த்துக் கிடந்திருக்கிறேன்.

மன்னித்துவிடு அனு, எனக்காக எல்லாவற்றையுமே பிறிதாக்கிக்கொண்டவள் நீ. இந்த மரணப்பயணத்தில் எந்த நிலையிலும் சலனப்படக்கூடாது என நினைத்திருந்தேன். உன் வாசமும் நினைவுகளும் என்னை சலனப்படுத்திவிட்டது. என்னை எங்கு அடித்தால் வலிக்கும் என நன்றாகத்தெரிந்த நீ அதே இடத்தில் அடித்திருப்பது அதிகவலியை உமிழ்கிறது. ஆம். நான் உன்னுடன் பேசுவதில்லை. பேசுவதில்லை என்பதை விட ஒதுங்கிவருகிறேன் என்பதே உண்மை. உன்னை நானும் என்னை நீயும் வெறுத்துவிடக்கூடாது எனவும் நமக்குள் இருந்த காதல் அப்படியே இருந்துவிடட்டும் எனவும் தான் இதுவரையிலும் ஒதுங்கிவந்தேன். இதற்கு முன்புவரை நடந்த ஊடல்கள் அனைத்திலும் சண்டையிட்டவள் நீயே. இருப்பினும் உன்னுடன் பேச ஆவலோடு ஒவ்வொருமுறையும் வந்திருக்கிறேன். இன்று உனக்கு நான் சரிப்பட்டுவராதவன் ஆகிவிட்டேன். உன்முன், உனதன்பின் முன் தோற்றுவிட்டேன். என் வாழ்க்கையைத் திரும்பிப்பார்த்தால் எங்கும் நீ மட்டுமே நிறைந்திருக்கிறாய். உன்னை நீக்கினால் எனக்கென்று எதுவுமே இல்லை. இன்னும் ஆயிரம் ஆயிரம் விஷயங்களைச் சொல்லமுடியும். உலகிற்காக செய்துகொள்ளும் சமரசம் போதாதென, உன்னுடனான உறவிலும் நான் நானாக இல்லாமலிருக்க சமரசம் செய்துகொள்ளமுடியவில்லை.        

என் அறையைக் கடந்துவிட்டேன்.உன் நினைவுகளைக் கடக்கமுடியுமா எனத்தெரியவில்லை.என் கண்கள் மூடியிருக்கின்றன.காதுகளில் காற்று கடைசி இசையை வாசித்துக்கொண்டிருக்கிறது. கைகள் விரிந்தவண்ணம் உள்ளது. என் மனதில் ஒரு இனம் புரியாத உணர்ச்சி. காற்று என் கண்களை திறக்கிறது.என் உடல் தரையில் அடித்து நொறுங்குகிறதுமன்னித்துவிடு அன்பேஎனக்கு வேறு வழி தெரியவில்லை.



இந்த வலியெல்லாம் ஒரு பொருட்டே அல்லஇப்போதைக்கு என் கவலையெல்லாம் நான் எழுதிய கடைசிக் கடிதத்தை படித்திருப்பாயா என்பது மட்டுமே.

- ஷா

1 comment:

  1. sarakku irukkuya pin yeppadi intha mathiri varthaigal vanthu vizum

    ReplyDelete

கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன